தஞ்சை பள்ளி மாணவிக்கு சித்தி சூடு வைத்து கொடுமைப்படுத்தினார்.. தாத்தா, பாட்டி உருக்கமான பேட்டி
தஞ்சை: எனது பேத்தி இறந்ததற்கு காரணம் சித்தி கொடுமை என தஞ்சை பள்ளி மாணவியின் தாத்தா, பாட்டி புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவி அரியலூரை சேர்ந்தவர் என்பதால் அவர் அந்த பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த மாணவி இறந்ததற்கு காரணம் மதமாற்றம் என பாஜக குற்றம்சாட்டியது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் வீடியோ எடுத்த நபர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதமாற்றம் இல்லை
இதுகுறித்து சக மாணவிகள் யாரும் மதமாற்றம் குறித்து பள்ளியில் நிர்பந்தித்ததில்லை என்றே விசாரணையில் தெரிவித்தனர். இந்த நிலையில் சித்தியின் கொடுமைதான் மாணவியின் இறப்புக்கு காரணம் என சொல்லப்பட்டது. சித்தி கொடுமை குறித்து 2019ஆம் ஆண்டே 1098 என்ற உதவி எண்ணிற்கு புகார் வந்ததாகவும் நேரில் சென்று மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அந்த சிறுமி அதை மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலை
அந்த மாணவி பேசிய ஒரு புதிய வீடியோ அண்மையில் வெளியானது. அதில் விடுதியில் வார்டன் தன்னை படிக்க விடாமல் வேலை வாங்கியதாகவும் அதனால் மதிப்பெண்கள் குறைந்ததால் இனி நம்மால் படிக்கவே முடியாது என்ற அச்சத்தில் விஷம் குடித்ததாகவும் அந்த வீடியோவில் மாணவி கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா, மாவட்ட எஸ்பி ரவளி பிரியா உள்ளிட்டோர் இன்றைய தினம் மைக்கேல்பட்டிக்கு வந்திருந்தனர். அங்கு விசாரணை நடத்தினர்.

பேத்திக்கு சூடு
இந்த நிலையில் மாணவி மரணம் குறித்து அவரது தாத்தா சுப்பிரமணி தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், எனது மகளுக்கு பிறகு மாணவியை எங்களுடன் ஒட்டவிடாமல் அவரது தந்தை வைத்திருந்தார். இதையடுத்து அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக் கொள்வர் என நினைத்தோம். ஆனால் அந்த சித்தி எனது பேத்திக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் என்றார்.

குழந்தைகள்
அது போல் மாணவியின் பாட்டி மங்கையர்க்கரசி கூறுகையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டது முதல் எங்களுக்கும் எங்கள் பேத்திக்கும் இடையே தொடர்பை அவரது தந்தை துண்டித்துவிட்டார். நாங்களும் குழந்தைகள் நன்றாக வளருவர் என நினைத்தோம். ஆனால் எனது பேத்தி இன்று இல்லாமல் போய்விட்டார் என்றார். அது போல் மாணவியின் உறவினர் பிரபாகரன் கூறுகையில் விடுதியில் படிக்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் எல்லா வேலையையும் தன்னையே வாங்குவதாகவும் பொங்கலுக்கு கூட மருந்து குடித்துவிட்டு வாந்தி எடுத்ததால் மட்டுமே அனுப்பியதாகவும் மாணவி தெரிவித்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications