அரியலூர் மாணவி தற்கொலை.. தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முற்றுகை.. எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது
மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர்: அரியலூர் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவரின் மகள், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஹாஸ்டலில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஹாஸ்டர் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தற்கொலைக்கு காரணத்தை கண்டறிந்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முற்றுகை
அரியலூர் +2மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும், மதமாற்றம் செய்ய முயலும் அந்த பள்ளியை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ. 1 கோடி இழப்பீடு
இந்த போராட்டத்தில் எச்.ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாததால், சிபிஐ வழக்கை விசாரிக்க வேண்டும், அந்த பள்ளியை இழுத்து மூடவேண்டும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

நிதி வழங்க வேண்டும்
நீதிமன்றம் உத்தரவிட்டதால் உடலை பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்த எச். ராஜா, மணப்பாறையில் தந்தை தோண்டிய குழியில், சிறுவன் விழுந்து உயிரிழந்த போது திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர். மேலும் கட்சி சார்பாக நிதி வழங்கினர். ஆனால் ஏன் இந்த மாணவி உயிரிழப்புக்கு அவர்கள் வரவில்லை என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் அனைவரும் மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கருப்பு முருகானந்தம், ராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை
இதனிடையே, தனது மகளின் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது, இறந்த மாணவியின் உடலை 2வது முறை பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை. உடலை மனுதாரர் பெற்று கொண்டு, அவர்களின் வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மாணவியின் பெற்றோர் மாஜிஸ்திரேட் முன்பு நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து 24ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications