தஞ்சை மாவட்ட காவல்துறையின் அசத்தல் மீம்.. மழை பெய்தாலே மக்களுக்கு இனி இதுதான் ஞாபகம் வரும்!
தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. சென்னை மட்டுமல்லாது அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பரவலான பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சாலைகளில் உள்ள பள்ளம், மேடு உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க முடியாமல் நடந்து செல்வோரும் , வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சை காவல்துறை
மழைக்காலம் தொடங்கி விட்ட இந்த சூழ்நிலையில்தான், தஞ்சாவூர் காவல்துறை ஒரு வித்தியாசமான விளம்பரத்தை சமூக வலைதளம் மூலமாக முன்னெடுத்து வருகிறது. சிவாஜி கணேசன் , ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வரியை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக மீம் மாதிரி பயன்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை.

படிக்காதவன் பாட்டு
அந்த மீம் கூறுவது இதுதான் . தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை, மழைக்கால எச்சரிக்கை என்று குறிப்பிட்டு விட்டு, "செல்லும் வழி எங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் " இவ்வாறு பாடல் வரிகளை குறிப்பிட்டு விட்டு, அதன்பிறகு, ஆகையால் மழை காலங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள், என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சமயோஜிதம்
திரைப்படத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்திற்காக எழுதப்பட்ட அந்த வரிகளை இந்த காலகட்டத்திற்கு அப்படியே பொருந்திப் போகும் வகையில் பயன்படுத்தி வருகின்ற தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையின் சமயோசித புத்திசாலித்தனத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள். எளிதாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த மீம்ஸ் இருப்பதால் சமூக வலைதளங்களில் மக்கள் வேகமாக ஷேர் செய்கிறார்கள் .

மக்கள் பாதுகாப்பு
வாகனங்களில் செல்லும்போது அல்லது நடந்து செல்லும்போது கண்டிப்பாக இந்த பாடல் வரிகள் அவர்கள் மனங்களில் எதிரொலிக்கும். அது, அவர்கள் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்பதுதான் காவல்துறையின் எண்ணமாக இருக்கிறது. இதனிடையே மூன்றாவது நாளாக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் மழை பாதிப்பு சரியாகும் வரை மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று அவர் இன்று மதியம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications