காத்திருந்து பூத்து போன கண்கள்.. நழுவிய ரஜினி.. பாஜகவில் கூண்டோடு இணையும் தஞ்சை ரசிகர் மன்றத்தினர்
தஞ்சை: தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைகின்றனர்.
தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி கணேசன் மூலம் மாவட்டத்தில் உள்ள மொத்த ரசிகர் பட்டாளத்தையும் பாஜகவில் இணைக்க காய் நகர்த்தியிருக்கிறார் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் கருப்பு முருகானந்தம்.
தஞ்சையை போலவே இன்னும் பல மாவட்டங்களிலும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு பாஜக பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்! இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!
வாக்கு வங்கி
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சிக்கு வாக்குவங்கியை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அந்த வகையில் ரஜினி ரசிகர்களை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளார். தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி கணேசன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள மொத்த ரசிகர் பட்டாளமும் பாஜகவில் இணையவுள்ளது.
தஞ்சை மாவட்டம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த இணைப்பு வைபவம் நடைபெறுகிறது. தஞ்சையை தொடர்ந்து இன்னும் சில மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்புகளை அந்தந்த மண்டலம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாஜக முக்கியப் பிரமுகர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜினி ரசிகர் மன்றம்
தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணைவதன் பின்னணியில் பாஜக மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலமே இந்த இணைப்பு சாத்தியமானதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே இப்போதே ஆதரவை பெருக்குவதற்கான பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் பொறுப்புகள்
இதனிடையே பாஜகவில் இணையும் ரஜினி ரசிகர்களுக்கு உள்ளூர் அளவில் பொறுப்புகள் கொடுக்கவும் அண்ணாமலை யோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ரஜினிகாந்தை பாஜகவில் இணைக்க அக்கட்சியின் தேசிய நிர்வாகிகள் எவ்வளவோ முயற்சித்தும் அது நடக்கவில்லை. இப்போது அவரது ரசிகர்களை இழுக்கும் படம் ஆரம்பாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.