கடல் கடந்த காதல்..மாப்பிள்ளைக்கு தஞ்சை-பொண்ணுக்கு கஜகஸ்தான்..தமிழ்முறைப்படி திருமணம்..சுவாரசிய தகவல்
கஜகஸ்தான் நாட்டு பெண்ணுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கும் தமிழ் முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது.
தஞ்சை: கஜகஸ்தான் நாட்டு பெண்ணுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கும் தமிழ் முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. கடல் கடந்த இந்த காதல் எப்படி மலர்ந்தது என்பது குறித்த சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதுண்டு. .காதலுக்கு எல்லையும் தான் கிடையாது.. மாநிலம் விட்டு மாநிலம் இல்லை. நாடு விட்டு நாடு.. இன்னும் சொல்லப்போனால் கண்டம் விட்டு கண்டம் கூட இப்போது காதல் கைகூடுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தால் உலகம் சுருங்கிப்போனது இதற்கு ஒரு காரணமாக அமைந்தாலும் வேலை நிமித்தாகவும் கல்வி பயிலவும் வெளிநாடுகளுக்கு செல்லும் பலரும் அங்கே காதல் வயப்படுவதுண்டு.

தமிழ் முறைப்படி திருமணம்
இத்தகைய காதலை இரு வீட்டினரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் விரும்பிய படி தங்கள் கலாசார முறையை பின்பற்றி பல இளைஞர்களும் தற்போது வெளிநாட்டு பெண்களை மணந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சுவாரசிய காதல் திருமணங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கஜகஸ்தான் நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மாப்பிள்ளையின் சொந்த ஊரில் தமிழ் பாரம்பரியப்படி நடைபெற்றுள்ளது. இந்த காதல் திருமணம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

கஜகஸ்தானில் யோகா ஆசிரியர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்து மதுக்கூர் என்ற பகுதி அருகே புலவஞ்சி கிழக்கு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். 33-வயதான பிரபாகரன் டிப்ளமோ யோகா படிப்பு முடித்துள்ளார். கஜகஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னிடம் யோகா கற்க வந்த கஜகஸ்தான் நாட்டு பெண் அல்பினால் என்பவருக்கும் பிரபாகரனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்துள்ளனர்.

சொந்த ஊரில் திருமணம்
திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும் தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் எடுத்து சொல்லியிருக்கின்றனர். இரு வீட்டினரும் இந்த கடல் கடந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெற்றோரின் சம்மதம் கிடைத்ததால் பிரபாகரன் தனது காதலியை சொந்த ஊரில் கரம் பிடிக்க நினைத்துள்ளார். தனது விருப்பத்தை பெண் வீட்டினரும் ஏற்றுக்கொண்டதால், மாப்பிள்ளையின் சொந்த ஊரான மதுக்கூரில் தமிழ்முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டினார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

கூடிய விரைவில் தமிழ் பேசிவிடுவேன்
தமிழ்நாட்டிற்கு மருமகள் ஆகியுள்ள கஜகஸ்தான் நாட்டு பெண் அல்பினால் கூறுகையில், "எங்கள் நாட்டு கலாசாரத்தை விட இங்குள்ள தமிழ் கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை இயற்கை சார்ந்த அமைப்புகள் ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் தமிழ் பேச பழகிவிடுவேன். நானும் ஒரு தமிழ் பெண்ணாகிவிடுவேன்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

காதல் பற்றி சொன்ன போது
மணமகன் பிரபாகரன் கூறும் போது, "யோகா ஆசிரியராக கஜகஸ்தானில் பணி செய்து வருகிறேன். என்னிடம் யோகா கற்பதற்காக அல்பினால் வந்திருந்தார். என்ஜினியரான அல்பினாலுக்கும் எனக்கும் 2-வயதுதான் வித்தியாசம். வேலை பார்த்துக்கொண்டே என்னிடம் யோகா கற்று வந்தார். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு காதல் வந்தது. இந்த காதல் குறித்து எனது பெற்றோரிடம் கூறிய போது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அல்பினால் வீட்டை பொறுத்தவரை தந்தை இறந்துவிட்டார். தாயாரிடம் காதல் பற்றி சொன்ன போது முதலில் சற்று யோசித்தார். பிறகு அல்பினால் தாயாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். இதையெடுத்து எனது சொந்த ஊரில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications