போட்டுத் தாக்கு.. செம ஆட்டம் போட்ட தஞ்சை மேயர்! “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்”.. தஞ்சாவூர் மக்கள் முரட்டு Vibe!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று 'ஹேப்பி சன் ஸ்ட்ரீட்' நிகழ்வு நடைபெற்றது. தஞ்சை மேயர் சண்.ராமநாதன் உட்பட பலரும் டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
அன்றாடம் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்களின் மன அழுத்தம் குறையவும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு, சென்னை கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாநகராட்சி சார்பாக ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் நடத்தி வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மக்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட்டமாகத் தொடங்கவும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் கோர்ட் ரோடு ஆற்றுப்பாலம் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த் நிகழ்ச்சியை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த இந்நிகழ்ச்சியில் தப்பாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உற்சாகமூட்டும் கலகலப்பான நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வயது வரம்பு இல்லாமல் அனைவரும் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
தஞ்சை மேயர் சண்.ராமநாதனும் மேடையில் மற்றவர்களோடு இணைந்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தார். அவருடன் ஏராளமானவர்களும் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடினர். மேயர் உட்பட பலரும் மேடையில் நடனமாட, தஞ்சை மக்களும், இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் என பாடல்களுக்கு டான்ஸ் ஆட, மகிழ்ச்சியில் தஞ்சையே கலகலப்பாகியுள்ளது.












Click it and Unblock the Notifications