இன்ஸ்டாகிராம் லவ்வருடன் ஓடிப் போன நித்யா.. மனதை கல்லாக்கி கணவன் எடுத்த முடிவு! 3 உயிர் போச்சே!
தஞ்சாவூர்: தஞ்சையில் தந்தையே தனது மூன்று குழந்தைகளை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரத்தில் பெற்ற குழந்தைகளையே அவர் கொலை செய்ததாக கூறி காவல் துறையில் சரணடைந்திருக்கிறார்.
முறையற்ற உறவு சிக்கல்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் முறையாக விவாகரத்து பெற்று பிரியலாம்.

ஆனால் முறையற்ற உறவு கள்ளக்காதலனுடன் மாயமாவது ஒருவரின் வாழ்வை மட்டும் அல்ல குழந்தைகளின் வாழ்வையும் கடுமையாக பாதிக்கும். சில நேரங்களில் உயிர்ப்பலி ஏற்படும் சம்பவங்களும் நிகழலாம். அப்படி ஒரு சம்பவம் தான் தஞ்சையில் அரங்கேறி இருக்கிறது.
தஞ்சை பரபரப்பு
கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் தந்தை. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. தஞ்சை மாவட்டம் பெரியகோட்டை கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான வினோத்குமாருக்கு நித்யா என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மனைவி கள்ளக்காதல்
முதல் குழந்தையான ஓவியா ஆறாம் வகுப்பு, இரண்டாவது குழந்தையான கீர்த்தி மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். ஈஸ்வரன் என்ற ஐந்து வயது மகனும் இருக்கிறான். இந்த நிலையில் நித்யாவுக்கு மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளாமல் நித்யா அந்த நபருடனேயே பேசி வந்திருக்கிறார். இந்த நிலையில் கணவன் குழந்தைகளை பிரிந்த நித்யா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் துயரம்
மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் ஆழ்ந்த வினோத்குமார் அவரை அடிக்கடி சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யாவை வினோத்குமார் சந்தித்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என நித்யா திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் வினோத் குமார். இதனால் மனைவி மீது ஆத்திரம் அடைந்த வினோத்குமார் அதனை குழந்தைகள் மீது காட்டி இருக்கிறார்.
3 குழந்தைகள் கொலை
சம்பவம் நடந்த அன்று குழந்தைகளுக்கு இனிப்புகள் வாங்கிக் கொடுத்த வினோத்குமார் அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதை அடுத்து மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்து விட்டதாக கூறி வினோத்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications