தஞ்சை தொகுதியை கேட்டு அடம்பிடிக்கும் காங்கிரஸ்! MP சீட் ரேஸில் டிடிவி தினகரன் சம்பந்தி!
தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியை திமுகவிடம் கேட்டு அடம்பிடிக்கும் காங்கிரஸ், முன்கூட்டியே அங்கு வேட்பாளரை கூட ரெடி செய்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை திமுக வழங்கியது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, என 9 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கேட்டு வருகிறது.

15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் டிமாண்ட் வைக்கிறது. திமுகவோ அதிகபட்சம் 7 சீட் தான் அதற்கு மேல் 1 சீட் கூட கிடையாது என்பதில் இப்போது வரை கறாராக உள்ளது. இதில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்பதே திமுக வட்டாரம் சொல்லும் தகவல். இந்நிலையில் காங்கிரஸ் கூடுதலாக போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலில், நெல்லை, தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தஞ்சை தொகுதியை பொறுத்தவரை திமுக விட்டுக்கொடுக்காது என்பதே நமக்கு கிடைத்த தகவல்.
காங்கிரஸ் கட்சி சார்பில் சிங்கார வடிவேல், துளசி அய்யா வாண்டையார் போன்றோர் ஏற்கனவே தஞ்சை மக்களவைத் தொகுதி உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். இதனால் திமுகவுக்கு ஈடாக இல்லையென்றாலும் தஞ்சை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு செல்வாக்கு உண்டு. அதேபோல் ஜி.கே.மூப்பனாரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் இருந்த வரை தஞ்சையில் தனக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தை வைத்திருந்தார்.
1977 ஆம் ஆண்டு தஞ்சை மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றது. மற்ற தேர்தல்களில் திமுக ஆதிக்கமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த முறை ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கப்பட்டால் டிடிவி தினகரனின் சம்பந்தி கிருஷ்ணசாமி வாண்டையார் கை சின்னத்தில் களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பூண்டி வாண்டையார் குடும்பத்தை பொறுத்தவரை செல்வாக்கு மிகுந்த குடும்பமாக திகழ்கிறது. வாண்டையார் தேர்தலில் நிற்கிறார் என்றால் கட்சி பேதங்களை கடந்து அவருக்கு ஓட்டுக்கள் விழும் என்பது காங்கிரஸ் போடும் அரசியல் கணக்கு.
ஆனால் இதற்கு திமுக ஒப்புக்கொள்ள வேண்டுமே, ஏற்கனவே திமுகவில் எம்.பி. சீட் எதிர்பார்த்து பழஞ்சூர் செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி, அஞ்சுகம் பூபதி, மீண்டும் பழனிமாணிக்கம் என ஒரு பெரிய படையே காத்திருக்கிறது. இதனால் தஞ்சை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும், யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து டி.ஆர்.பாலு தஞ்சைக்கு ஷிப்ட் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தத்தில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட திமுக, காங்கிரஸ் ஆகிய 2 தரப்புமே போட்டியிட ஆர்வம் காட்டுவதால் நாளைய தினம் நடைபெறும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications