துளியும் கெமிக்கல் இல்லை.. இயற்கை விவசாயம் மூலமே.. திருவள்ளூவர் படத்தை வயலில் வரைந்த விவசாயி!
தஞ்சை: தமிழ் மொழி மீதான பற்று காரணமாக இளங்கோவன் என்ற விவசாயி செய்த செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்தியாவில் இயற்கை விவசாயத்தை மீட்க பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கெமிக்கல் உரங்களுக்குப் பழகிய விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தச் சூழலில் தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

தஞ்சை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மலையப்பநல்லூரை சேர்ந்த 62 வயது விவசாயி இளங்கோவன். இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவர் தனது வயலில் திருவள்ளுவரின் உருவம் தெரியும்படி பயிர்களை விளைவித்துள்ளார். , 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட இந்த திருவள்ளுவர் உருவம் கழுகு பார்வையில் பார்த்தால் அற்புதமாகத் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளுவர்
இதற்காக அவர் மூன்று மாதங்களுக்கும் மேலாக உழைத்துள்ளார். சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி ரகத்தைக் கொண்டும் அவர் திருவள்ளுவர் படத்தை வடிவமைத்து உள்ளார். அதாவது கெமிக்கல், பெயின்ட் இல்லாமல் இயற்கையாகவே இந்த படத்தை அவர் வரைந்துள்ளார். கும்பகோணம் கலைக் கல்லூரியின் கே.வில்வநாதன் என்ற பேராசிரியரின் உதவியுடன் சுமார் அரை ஏக்கர் வயலில் திருவள்ளுவர் படத்தை விவசாயி வரைந்துள்ளார். அதன்பின், நுணுக்கமாக அந்த கோடுகளில் நெல்லை நடவு செய்தார்.

தனி ஆளாக
பொதுவாக, அரை ஏக்கரில் நெல் நடவு செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அந்த பணியை முடிக்க இளங்கோவனுக்கு ஐந்து நாட்கள் ஆனது. திருவள்ளுவர் படம் துல்லியமாக வர வேண்டும் என்பதற்காக இவர் தனி ஆளாகவே பயிரை நடவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்குச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

விழிப்புணர்வு
இது குறித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வரும் இளங்கோவன் கூறுகையில், "இயற்கை விவசாயம் குறித்து திருவள்ளுவர் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வைப் பரப்பத் திருவள்ளுவரைத் தவிரச் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடியாது. இதன் காரணமாக இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக அவரது உருவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன்

கிராமத்தில் ஒருவர்
திருவள்ளுவர் எழுதிய மொத்த குறளில் 11 குறள்களில் இயற்கை விவசாயத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும். எனது இந்த முயற்சியைப் பார்த்து ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் மகிழ்ச்சி தான். வரும் காலத்தில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை நட உள்ளேன் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications