அதிர்ந்த தண்டவாளங்கள்.. “பாஸ்” ஆன திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதை! கூடுதல் ரயில்கள் வர வாய்ப்பு
தஞ்சாவூர்: திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் அதிவேக ரயில் இயக்க சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததன் காரணமாக இந்த ரயில் பாதை வழியாக செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதுடன் கூடுதல் ரயில் சேவைகள் கிடைக்கும் சூழலும் உருவாகி இருக்கிறது.
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி வழியாக செல்லும் திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதை கடந்த சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டு சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை, எர்ணாகுளம், வேளாங்கண்ணி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக ரயில்கள் சென்று வருகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை ஆகிய ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் தொடர்பாக கடந்த ஆண்டு ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. 149.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் வழித் தடத்தில் தற்போது பயணிகள் மற்றும் விரைவு ரயில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகத்தை 110 கிலோமீட்டர் அளவுக்கு அதிகப்படுத்தி இயக்குவதற்காகவே ரயில்வே நிர்வாகம் அதிவேகத்தில் ரயில்களை இயக்கி சோதனையிடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 11.25 மணிக்குள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்பாதையிலும் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குள் திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையிலும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் திருவாரூர் - காரைக்குடி இடையே அதிவேகத்தில் ரயிலை இயக்கி உறுதித்தன்மை ஆராயப்பட்டது.
இருப்புபாதை உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் வகையில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ஓ.எம்.எஸ். அதிவேக ரயில் சோதனை ஓட்டம் திருவாரூர் - காரைக்குடி இடையே வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் மாலை 4.40 மணிக்கு இந்த அதிவேக சோதனை ரயில் புறப்பட்டு தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மணிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் 122 கிலோமீட்டர் பயணம் செய்து காரைக்குடியை மாலை 5.40 மணிக்கு அடைந்தது.
இதன் மூலம் இந்த தடத்தில் வருங்காலத்தில் விரைவு ரயில்கள் 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் இவ்வழியே செல்லும் ரயில்களின் பயண நேரம் வெகுவாக குறைவதுடன் கூடுதல் ரயில்களின் சேவைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications