Koovathur Politics: பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு தூக்கு மாட்டி தொங்கலாம்! டிடிவி தினகரன் தாக்கு
தஞ்சை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நாங்கள் கூட்டணி செல்வதற்கு தூக்கு மாட்டி தொங்கிடலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். கூவத்தூரில் நடந்தது என்ன என்பது குறித்து தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன் பல்வேறு உண்மைகளை உடைத்து பேசியுள்ளார்.
டிடிவி தினகரன் பேசுகையில், சாத்தான் வேதம் ஓதுவது போல் நன்றியை மறந்து விட்டு பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி, துரோகத்தை தவிர பழனிசாமிக்கு வேறு எதுவுமே தெரியாது. பிரச்சார கூட்டம் ஒன்றில் எடப்பாடி பேசுகையில், "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க முற்பட்ட போது பாஜக காப்பாற்றியதாக" எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அது தவறு.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். இதையடுத்து சசிகலாவை முதல்வராக்க அதிமுக எம்எல்ஏக்கள் விரும்பினர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது பழனிசாமியை காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுகதான்.
கூவத்தூரில் நடந்தது என்ன
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்துதான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். அப்போது என்னிடம் வந்து, "அண்ணே நான்தான் முதல்வர் வேட்பாளர் என முன்கூட்டியே அறிவித்தால் யாரும் (எம்எல்ஏக்கள்) ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட மாட்டார்கள். எனவே கையெழுத்துகளை வாங்கியதும் அறிவித்துவிடுங்கள்" என கேட்டுக் கொண்டார். இதை நான் ஏற்கெனவே ஒரு முறை கூறியிருந்தேன்.
பழனிசாமி துரோகி
பழனிசாமி நம்பிக்கையற்ற மனிதர் என எல்லோருக்கும் தெரியும். அவர் படுபாதாளத்திற்கு தள்ளப்படுவார். அதிமுக தோற்றால் நான் காரணம் அல்ல, தன்மானம்தான் முக்கியம் என சொல்லும் எடப்பாடி டெல்லி சென்றது ஏன்? 18 எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் சரியில்லை என மனுகொடுத்தது அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக இல்லை. அன்று நடந்த பிரச்சினை என்னவென நமக்கு தெரியும்.
முதல்வரானது எப்படி
ஆட்சியை காப்பாற்றியவர்களை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமிதான். கட்சியை தோற்றுவித்தவர் போலவும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானவர் போலவும் பேசுகிறார். எப்படியெல்லாம் புரூடா விடுகிறார் இந்த பழனிசாமி.
எதுக்கும் பயப்படமாட்டேன்
நேற்று பேசும் போது, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என சொன்னார். ஆனால் டெல்லிக்கு போயுள்ளார். தென் மாவட்டத்திலும் டெல்டாவிலும் என மொத்தமாக பல்லாயிரம் கோடி செலவிட்டும் பழனிசாமி வெற்றி பெறாதது ஏன், பாஜகவுக்கு விசுவாசமாக செங்கோட்டையனை கைக்கூலி என பேசுகிறார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் கண்டிப்பாக தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்.
20 சதவீதம் ஓட்டு
20 சதவீதமாக இருக்கும் அதிமுகவின் ஓட்டு வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 10 சதவீதமாக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவித்தார். அப்போது நிருபர் ஒருவர், "விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிக்காரர்கள் மக்களுக்கு இடையூறாக இருந்ததாக சொல்லியிருக்கிறார்கள். விஜய் தனது பாணியை மாற்ற வேண்டுமா, அவருக்கு நீங்கள் என்ன அட்வைஸ் கொடுக்கறீங்க" என கேட்டார்.
தூக்கு மாட்டிக்கலாம்
அதற்கு டிடிவி தினகரன், "வேறு கட்சிக்கு எல்லாம் நாங்கள் அறிவுரை கொடுக்க கன்சல்டிங் கம்பெனியா நடத்துறோம், என்ன சார் கேட்கறீங்க, அதெல்லாம் அந்தந்த கட்சி, தலைவர் பார்த்துக் கொள்வார்கள். எங்கள் கட்சிக்கு நீங்கள் அறிவுரை கொடுத்தால் நாங்கள் ஏற்கிறோம், என்ன பழனிசாமியுடன் கூட்டணிக்கு போங்க என சொல்கிறீர்களா, அதற்கு பதில் நாங்கள் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்றார். மேலும் அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் மாதம் அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications