தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!
தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தஞ்சை பட்டுக்கோட்டை வேட்பாளர் பல்வேறு புகார்களில் சிக்கியிருப்பதாகவும், எனவே அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்றும் தவெக மகளிரணி தலைமை வலியுறுத்தியிருக்கிறது.
கஞ்சா வழக்கில் ஜாமீனில் வந்தவர், போலி மருத்துவம் குறித்து பேசுபவர், சாதி வெறியன் என்று சொல்பவர் ஆகியவர்களுக்கு தவெக சீட் வழங்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இப்படி இருக்கையில், தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக தவெக செயல்படுகிறது என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

கொந்தளித்த மகளிர் அணி
இது குறித்து தவெக மகளிரணி அமைப்பாளர் ப.பாத்திமாகனி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நான் ப.பாத்திமா கனி, தஞ்சை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பணியாற்றி வருகிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உறுதுணையாக இருந்து, பெண் உறுப்பினர்களை அதிக அளவில் இணைத்துள்ளேன்.
பட்டுக்கோட்டை வேட்பாளர்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகுந்துள்ளது. எனினும், தற்போதைய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏனாதி மதன் அவர்களுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் பெண்களின் வாக்குகளை பெறுவது கடினமாகும் நிலை உருவாகியுள்ளது. மேலும், நமது கட்சியில் இணைந்துள்ள பல பெண் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு வழங்க தயக்கம் காட்டுகின்றனர்.
ஏனாதி மதன்
ஏனாதி மதன் அவர்கள் வேட்பாளராக தொடரும் பட்சத்தில் நமது கட்சி பட்டுக்கோட்டை தொகுதியில் நான்காம் இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பட்டுக்கோட்டை மாவட்ட பொறுப்பில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் அவருக்கு வேண்டப்பட்ட உறவினர்கள், நண்பர்கள், மனைவி ஆகியோருக்கு பதவி அளித்துள்ளார். பட்டுக்கோட்டை மாவட்ட மகளிர் அணியிலும் தலைவிக்கு கீழ் 08 பெண்களும், அவர்களுடைய ஜாதி அடிப்படையில் உறவினர், நண்பர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் மீது குற்றச்சாட்டு
என்னை தலைமைக்கு செயல்படாமல் இருக்கிறேன் என்று பொய்யான தகவலை அளிப்பதற்காக என் செயல்களை புறக்கணிக்கிறார். தலைமைக்காக செய்யக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எனக்கு அழைப்பு விடுவதில்லை. தலைமையில் நீங்கள் கேள்வி கேட்கும்போது நான் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு வைப்பதற்காக இதை நடைமுறை செய்கிறார். ஆனால் நான் தலைமைக்காக ஆணைக்கு இணங்க உண்மையாக உழைக்க என்றும் எங்கள் அண்ணன் தளபதி. விஜய் அண்ணா அவர்களுக்காக உழைக்க நான் தயார் நிலையில் உள்ளேன்.
வெற்றி வாய்ப்பு
மகளிர் தின நிகழ்ச்சிக்கும், இவ்தார் நிகழ்ச்சிக்கும் என்னை புறக்கணித்து அவருக்கு வேண்டிய மற்ற பெண்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தினார். எனவே, கட்சியின் வெற்றியை கருத்தில் கொண்டு, பட்டுக்கோட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய வேட்பாளரை மாற்றி அதிக வெற்றி வாய்ப்பு கொண்ட வேட்பாளரை அறிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications