எடப்பாடியும் வேணும்.. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் ட்விஸ்ட்!
தஞ்சாவூர்: ஜெயலலிதா மறைந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறவில்லை. மறுபக்கம் கட்சியும் அணி அணியாக சிதறி கிடக்கிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. 2016ம் ஆண்டு தர்மயுத்தம் நடந்த நிலையில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மீண்டும் பிரச்னை வெடித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஓரம் கட்டப்பட்டார். சமீபகாலமாக அதிமுகவில் மீண்டும் பிரச்னை அதிகரித்து வருகிறது.

ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு, சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வத்தின் சில ஆதரவாளர்களும் விலகி கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் அவரது மகன் ரவீந்திரநாத் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
ஒருங்கிணைந்த அதிமுக உருவானால் மட்டுமே மீண்டும் வெற்றி பெற முடியும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதை பிரதிபலிக்கும் வகையில் பன்னீர்செல்வத்துக்கு பக்க பலமாக உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள அதிமுக தொண்டர்களில் 100 சதவீதத்தில், 99.9 சதவீதம் பேர் அதிமுக இணைய வேண்டும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அவர்களின் இந்த எண்ணங்களை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியையும் இழக்க விரும்பவில்லை. அதேபோல மற்றவர்களையும் இழக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் அதிமுக ஒன்றிணையக் கூடாது என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாகவே இந்த இயக்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். இதுதான் காலத்தின் கட்டாயம். அது ஒற்றை தலைமையா அல்லது இரட்டை தலைமையா என்பதெல்லாம் அதிமுக ஒன்றிணையும்போது முடிவுக்கு வரும். 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.
2026 தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி மீண்டும் அமைக்கும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டுதான், அவர் அதிமுகவை அழித்து விடுவார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
உண்மையும் அதுதான். அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டர்களின் எண்ணம். அது விரைவில் நிறைவேறும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அமமுக, தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என நானும், நத்தம் விசுவநாதனும் வலியுறுத்தினோம். ஆனால், அப்போது அதிமுக தனித்து நின்றாலே சுமார் 150 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்.
அதேபோல நாடாளுமன்ற தேர்தலிலும் நமக்கு மெகா கூட்டணி உருவாகும், 40 சதவீதம் வாக்குகளை பெற்று பிரம்மாண்டமாக வெற்றி பெற்று விடலாம் என்றும் பழனிசாமி கூறினார். ஆனால், தேர்தல் முடிவில் 20 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று, தற்போது அதிமுகவை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அதை நினைத்து தான் தினகரன் இப்படி கூறியுள்ளார்." என்றார்.












Click it and Unblock the Notifications