நெருடல்! கண்ணீர்! கலக்கம்.. சசிகலா குடும்பமே வந்தும் அவர் மட்டும் லேட்! டிடிவி அப்படி செய்தது ஏன்?
தஞ்சாவூர்: நேற்று சசிகலா தனது கணவர் நடராஜன் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தி, கோ பூஜை செய்தார். இந்த நிகழ்வின் போது நடந்த சில சம்பவங்கள் அதிமுகவினர், அமமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் அதிமுகவை கைப்பற்றும் விதமாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த வாரம் திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து தற்போது சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று சசிகலா தனது கணவர் நடராஜனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

நடராஜன்
நடராஜனின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சசிகலா நேற்று விளார் பைபாஸில் இருக்கும் நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இங்கு சசிகலா சார்பாக கோ பூஜை நடத்தப்பட்டது. அதோடு திருவருட்பா உள்ளிட்ட தமிழ் பாடல்கள் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு முழுக்க சசிகலா மிகவும் உருக்கமாக காணப்பட்டார். பலமுறை கண்ணீர் விட்டவர், டிஷ்யு வைத்து முகத்தை துடைத்தபடி இருந்தார்.

உருக்கமான நிகழ்வு
இந்த நிகழ்வு முழுக்க ஓ ராஜாதான் முன்னிலை வகித்தார். அதிகாலையே நினைவு இடத்திற்கு வந்த ஓ ராஜா அங்கு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அதேபோல் நடராஜன் நினைவிடத்தில் சசிகலா மலர் தூவிய போது ஓ ராஜாதான் பூக்களை எடுத்து கொடுத்தார். சசிகலாவின் நெருங்கிய சொந்தங்களை விட ஓ ராஜாதான் இந்த நிகழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்றார். இந்த நிகழ்வில் நடந்த இன்னொரு சம்பவமும் சசிகலா உறவினர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழப்பம்
இந்த நிகழ்விற்கு வந்துவிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா சென்ற பின்தான் அங்கு டிடிவி தினகரன் வந்தார். சசிகலா அதிகாலையே வந்து நடராஜன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஆனால் டிடிவி தினகரன் 10 மணி அளவில்தான் நினைவிடத்திற்கு வந்தார். சசிகலாவை சந்திக்காமல் தவிர்க்கும் வகையில் டிடிவி தினகரன் லேட்டாக வந்துவிட்டு சென்றார். சசிகலா - டிடிவி இடையே அவ்வளவு நெருக்கமான உறவு இப்போது இல்லை.

விரக்தி
சட்டசபை தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து சசிகலா விலகி இருப்பதாக அறிவித்தது டிடிவி விரும்பவில்லை. இதன்பின் இரண்டு பேருக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் பெரிதாக அதன்பின் சந்தித்துக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இந்த குடும்ப நிகழ்வில் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு பேரும் சந்திப்பார்கள்... அதன்மூலம் இருவருக்கும் மனஸ்தாபம் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video

தவிர்த்தனர்
ஆனால் நேற்று இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர். இரண்டு பேருக்கும் இடையிலான நெருடல் இன்னும் தீரவில்லை என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. நேற்று நடந்த இந்த சம்பவம் அதிமுகவினர், அமமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓ ராஜா கூட சசிகலாவுடன் நட்பாக இருக்கிறார்.. ஆனால் உறவினர்களான டிடிவி - சசிகலா ஏன் பேசிக்கொள்வது இல்லை என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. வேறுபாடுகளை களைந்து இருவரும் ஒன்றாக செயல்படுவதே அதிமுகவை மீண்டும் கைப்பற்ற அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அமமுகவினர் முணுமுணுக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications