கல்யாண வீட்டில் "முடிச்சு.." பாடம் புகட்டுவோம்! ஓபிஎஸ்சுடன் இணைந்த குஷியில் டிடிவி தினகரன் பேச்சு
தஞ்சை: தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓபிஎஸ் உடன் இணைந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபு திருமணவிழாவில் பேசிய டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் அருமை நண்பர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி. உறவினர்களோடும் நண்பர்களோடும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் சுயநலப்போக்கினால் நாங்கள் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக கட்சியை தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமமுக தொடங்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக, அமமுக ஒன்றாக ஒரே குடையின் கீழ் இருப்பது மகிழ்ச்சி. திருமணம் என்றாலே மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் இணையும் திருமண விழாவில் உறவினர்களுடனும் சொந்தங்களுடனும் இணைந்து இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முன்னாள் அமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
30 ஆண்டு காலமாக ஒற்றுமையாக இருந்த அதிமுக தொண்டர்கள் எல்லாம் இன்றைக்கு ஒரு சிலரின் பேராசையால் பணத்திமிரினால், பேரசையால் பிரிந்திருக்கிறோம். இதனால் அதிமுகவிற்குத்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும் அம்மா சொன்னது போது அதிமுக எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்களுக்கு சேவை செய்வதற்காக செயல்படும். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நானும் நண்பர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்துள்ளோம்.
எனக்கும் நண்பர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இருக்கும் நட்பு உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏதோ விதி வசத்தால் நாங்கள் பிரிய வேண்டியதாகி விட்டது. அரசியலையும் தாண்டி எங்களுக்கு இடையேயான அன்பும் நட்பும் தொடர்ந்தே வந்தது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தொடர்ந்து கொண்டு செல்வதற்காக அதிமுக உடன் அமமுக கைகோர்த்து செயல்பட தொடங்கி விட்டது. அதற்கு பிள்ளையார்சுழியாக வைத்திலிங்கம் இல்லத்திருமண விழா அமைந்துள்ளது. அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் இங்கு வந்து தங்கள் வீட்டு விஷேசம் போல பங்கேற்றுள்ளனர்.
வரும் காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்டி, தீய சக்தியான திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி உண்மையான ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர இணைந்து செயல்படுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications