காலில் காயம்! மருத்துவமனை "டெஸ்டில்" வந்த அதிர்ச்சி தகவல்! மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 22 வயது பேச்சு திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விராணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருக்கிறது.

காயம்
ராஜஸ்தான் மாநிலம் ஹிரான் மங்கிரி பகுதியில் நேற்று முன்தினம் பேச்சு திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிவதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் அனுமதித்தனர். ஆனால் அப்பெண் நேற்று அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இந்த முயற்சியில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காப்பாளர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதனை
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளம்பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காப்பாளர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே தனியாக சுற்றி திரிந்திருந்தது, பின்னர் காப்பகத்திலிருந்து தப்பிக்க முயன்றது உள்ளிட்ட சம்பவத்தால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சைகை மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அவமானம்
அதாவது, வெவ்வேறு இடங்களில் நான்கு வெவ்வேறு நபர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். முதலில் பலாத்காரத்திற்கு உள்ளானது தனது தாயாருக்கு தெரியும் எனவும் ஆனால் இதை வெளியில் கூறினால் அவமானமாக இருக்கும் எனக்கருதி மறைத்துவிட்டதாகவும் இளம்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்தடுத்து மூன்று வெவ்வேறு நபர்களால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டதாகவும், இனி வீட்டுக்கு திரும்ப முடியாது என்று நினைத்து கால் போன போக்கில் அலைந்து திரிந்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி
வாக்குமூலம் பெற்றதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளனர். பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகளுக்கு முறையான பாலியல் கல்வி மற்றும் ஆண்-பெண் சமத்துவம் ஆகியவற்றை போதிப்பதன் மூலம் இம்மாதிரியான குற்றங்களை தடுக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications