5 நாளில் திருமணம்.. வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு ஸ்டேட்டஸ்.. தேனியில் பிரபல யூடியூபர் எடுத்த சோக முடிவு
தேனி: தேனி அருகே திருமணத்திற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு கோவில் தான் போனாலும்.. புண்ணியம் செய்தாலும்.. என்ற பாடலை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக வைத்திருந்ததால், அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஊத்துகாடை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). பட்டதாரியான இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் 5 நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. ராஜ்குமாருக்கும் கம்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 5 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்திற்கு 5 நாட்களே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்து வந்தது. மண்டபம் புக் செய்வது, திருமண பத்திரிகை கொடுப்பது என திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. ராஜ்குமாரும் உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்து வந்தார். அதன்படி தான் நேற்றும் ராஜ்குமார் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்கு செல்வதாக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பினார்.
இந்த நிலையில், கம்பர் அருகே உரக்கிடங்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ராஜ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். மேலும் அவர் பக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்தும் கிடந்தது. இந்த மைதனாத்திற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகுவதற்காக வந்த சிலர் ராஜ்குமார் இப்படி கிடப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் அவரை தண்ணீரை தெளித்து எழுப்பி பார்த்தும் முழிக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்து அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு குடும்பத்தினர் ராஜ்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
5 நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு திடீரென ராஜ்குமார் தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமாரின் நண்பர்கள், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ராஜ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார்.
அந்த ஸ்டேட்டசில், 'கோவில் தான் போனாலும்.. புண்ணியம் செய்தாலும்.. என்னுடைய பாவம் தீருமோ? இந்த உலகில்... இன்று தான்.. இன்று தான்.. என் முகத்தை பார்க்கிறேன். கண்ணிலே ஈரம் சேருதே...., கல்லையும் காலம் மாற்றுதே...' என்ற சினிமா பாடலை வைத்துள்ளார். தற்கொலை செய்யும் முன்பு ஏன் இந்த பாடலை ராஜ்குமார் ஸ்டேட்டஸாக வைக்க வேண்டும் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications