சென்னை- தேனி-போடி இடையே பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுமா? ரயில்வேக்கு பறந்த கோரிக்கை
தேனி: தேனி மற்றும் போடியில் இருந்து சென்னைக்கு வியாபாரம் மற்றும் இதர பணிகளுக்காக ஏராளமானவர்கள் தினமும் சென்று வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளாக போடியில் இருந்து சென்னைக்கும், இதேபோல் சென்னையில் இருந்து போடிக்கும் வாரத்தில் 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இதேபோல் சென்னை- போடி இடையே பொங்கல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் விவசாயமே பிரதானமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சுற்றுலா தலங்களாகவும் இருக்கிறது. தேனி மாவட்டத்தில் கொழுக்குமலை, குரங்கணி, மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, வீரபாண்டி கோவில், குச்சனூர், வைகை அணை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இதுதவிர தேனி மாவட்ட எல்லையில் மூணாறு, தேக்கடி, கொடைக்கானல் போன்றவை உள்ளன.

தேனி மாவட்டத்தை கடந்து தான் கேரளாவின் புகழ் பெற்ற சபரிமலைக்கு செல்ல முடியும். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபார நிமித்தமாக பயணிப்போர் பலர் ரயில் பயணத்தை விரும்புவார்கள். இடுக்கி, தேனி, மதுரைமாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக சென்னை போடிநாயக்கனூர் ரயில் இருக்கிறது.
இதற்காக போடி-மதுரை இடையே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதனை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி, கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் எல்லாம் முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதன் பிறகு போடி வரை பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மதுரை-போடி இடையே பயணிகள் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை சென்று வந்த மதுரை அதிவிரைவு ரயில், போடிநாயக்கனூர் சென்னை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக மாற்றப்பட்டது. இந்த ரயில் நேர் பாதையில் இல்லாமல், மதுரை, திண்டுக்கல், சேலம், காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக தேனி மாவட்ட மக்கள் மத்திய, மாநில அரசுக்கு கோாிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்வதற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயிலை சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி மார்க்கமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அதேபோல் சென்னை போடிநாயக்கனூர் இடையே மதுரை திண்டுக்கல் இடையே நேரடி ரயில் சேவையும், போடிநாயக்கனூர் கோவை இடையே நேரடி ரயில் சேவையும், போடிநாயக்கனூர்- கன்னியாகுமரி ரயில் சேவையும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை போடிநாயக்கனூரில் இருந்து தினசரி இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications