ரூ.100 கோடிக்கு சொத்துகள் வாங்கிய தேனி திமுக பிரமுகர்.. 1200 கோடி சம்பாத்தியம்.. சோதனையில் அம்பலம்
தேனி: தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவராக உள்ள ராஜ ராஜேஸ்வரியின் கணவர் சங்கர் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் போடி நகராட்சியில் கவுன்சிலராகவும் உள்ளார். இவர் ஏலக்காய் வணிகம் செய்து வருகிறார். இவர்வரி ஏய்ப்பு செய்து ரூ.100 கோடிக்கு சொத்துகள் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கடந்த ஏழு மாதத்தில் மட்டும் 1200 கோடிக்கு வணிகம் செய்துள்ளதாகவும், இந்த காலக்கட்டத்தில் மட்டும் 70 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பொறுத்தவரை ஏலக்காய் நகரம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த நகரம் தான் இந்தியாவின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. போடியில் இருந்து மூணாறு வரை உள்ள பகுதிகளில் தான் ஏலக்காய் அதிக அளவில் விளைகிறது. இங்கிருந்து தான் இந்தியா முழுவதுக்கும் தேவையான ஏலக்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஏலக்காய்களை பறித்து, தரம்பிரித்து, சுத்தம் செய்து அதனை ஏற்றுமதி செய்யும் இடமாக போடி இருக்கிறது.

இந்த வணிகத்தை பலர் போடியில் செய்து வருகிறார்கள். தற்போது ஏலக்காய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. இந்நிலையில் ஏலக்காய் வியபாரத்தில் திமுக பிரமுகர் சங்கர் என்பவர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்தினார்கள். இந்தசோதனையில் பல கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். யார் அந்த பிரமுகர் என்பதை பார்ப்போம்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி தலைவராக இருப்பவர் ராஜ ராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடிநாயக்கனூர் நகராட்சியின் 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
திமுக பிரமுகர் சங்கர், கேரள மாநிலத்தை சேர்ந்த பங்குதாரர்களுடன் சேர்ந்து ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களில் மட்டும் ரூ.1,200 கோடி வரை ஏலக்காய் வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சங்கர் ரூ.70 கோடி வரை வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன.
அதன் அடிப்படையில், போடிநாயக்கனூர் இரட்டை வாய்க்கால் பகுதியில் சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன், அவரது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் 4 நாட்களாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தி.மு.க. பிரமுகரான சங்கர் குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்து சுமார் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் வாங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சொத்து பட்டியலை தயாரித்து வருகிறோம். சங்கரின் மகன் லோகேஷ், வரி ஏய்ப்பில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வடமாநிலங்களுக்கு 3,000 கிலோ ஏலக்காய் அனுப்பி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் எங்களுடைய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணை முடிந்தவுடன் முழு விவரம் தெரியவரும்" என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications