சாப்பிட்டு 8 நாளாச்சு.. ஒற்றை வாழைப்பழத்தோட இருக்கேன்கா.. மாரிமுத்து பட்ட கஷ்டம்.. அக்கா கண்ணீர்
தேனி: 4 வருஷத்தில நான் சாதிக்கலைன்னா மெரினா கடல்ல குதிச்சிடுவேன்னு சொன்னான் என மாரிமுத்து குறித்து அக்கா பாக்கியம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நேற்றைய தினம் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத் தமிழ் ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
நேற்று காலை டப்பிங் பேசுவதற்காக ஸ்டூடியோ சென்ற அவருக்கு திடீரென வியர்த்தது, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்டூடியோவை விட்டு வெளியே வரும் காட்சிகளை பார்த்தோம். அதில் வெளியே வரும் அவர் நடக்க முடியாமல் நடந்து காரை தானே ஓட்டிச் செல்கிறார்.

பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து அவருடைய உடல் நேற்றைய தினம் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய உடல் நேற்று மாலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இவருடைய இறப்பு குறித்து தேனியில் உள்ள இவரது அக்கா பாக்கியம் கூறுகையில், என் தம்பி நல்லாதான் இருந்தான். எந்த நோய் நொடியும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எங்களை விட்டு போய்விட்டான். சினிமாவில் சாதிக்க எத்தனையோ கஷ்டங்களை பட்டானே அய்யா!
சுவற்றில் கரியால் எழுதிவைத்துவிட்டு சென்னை செல்வதாக வந்தான். என்னை பார்க்கும் போதெல்லாம், அக்கா சாப்பிட்டு 8 நாளாச்சுக்கா, ஒரு வாழைப்பழம்தான் கடைசியாக சாப்பிட்டது, பசிக்குது அக்கா என்பான். போர்த்திக்க போர்வை கூட இல்லை, பசங்கதான் கொடுத்தாங்க என்பான். நானும் உனக்கு ஏன்யா இந்த தலையெழுத்து, ஊருக்கு வந்துடு விவசாயம் பார்த்துகிட்டு ராஜா மாதிரி இருப்பே என்பேன்.
ஆனால் என் தம்பியோ அக்கா 4 வருஷத்தில் நான் சாதிப்பேன், இல்லாவிட்டாலும் மெரினா கடலில் குதித்து செத்துடுவேன்னு சொன்னானே! அப்பறம் படாதபாடுபட்டு சினிமாவில் சேர்ந்தான், இப்போதான் சீரியல் , பேட்டினு பிரபலமடைந்தான். ஆனால் அதற்குள் இப்படி போய்விட்டான். என் தம்பி படிப்பில் கெட்டிக்காரன், என்னுடைய மற்ற தம்பிகள் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தாலும் மதிப்பெண்களை குறைவாகவே வாங்குவார்கள்.
ஆனால் மாரிமுத்து ஒரு புத்தகத்தை சும்மா வாசிப்பான், ஆனால் நல்ல மார்க் எடுப்பான். கையெழுத்து முத்துமுத்தாக இருக்கும். வாத்தியார் எல்லாம் மாரிமுத்து மாதிரி படியுங்கள்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட என் தம்பி இன்று இப்படி இருக்கிறானே! என் அப்பா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்தார். இவ்வாறு பாக்கியம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications