மனிதனுக்கு இதயம்போல் அதிமுகவுக்கு தொண்டர்கள் தான் முக்கியம்.. ஓபிஎஸ்க்கு ஆதரவாக தனயன் ஓபிஆர் குரல்
தேனி: ‛‛மனிதனுக்கு இதயம் போல் கட்சிக்கு தொண்டர்கள் தான் முக்கியம்'' என எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளிக்கும் வகையில் தந்தை ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தனயன் ஓ ரவீந்திரநாத் பேசியுள்ளார்.
அதிமுக இரட்டை தலைமையில் பயணித்த கட்சிக்குள் பூதாகரமாக ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கியது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் செவிசாய்க்காத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உறுதியாக இருந்தது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை.
முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அவதூறு.. அதிமுக ஐடி விங் நிர்வாகியை ஆபீஸுக்கே போய் தூக்கிய போலீஸ்!
அதிமுக உள்கட்சி பூசல்
இருப்பினும் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்றம் விசாரித்தது. இதில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு என்பது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருந்தது. இதனை 2 அமர்வு நீதிபதிகள் பெஞ்ச்சில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் உத்தரவானது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உள்ளது. இதனை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
ரவீந்திரநாத் எம்பி
இதனால் அதிமுகவின் பிரச்சனை இன்னும் முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்து ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமா ரவீந்திரநாத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தொண்டர்கள் மனநிலை
‛‛அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்(ஓ பன்னீர் செல்வம்) தெளிவாக கூறியுள்ளார். அது அவரது மனநிலை மட்டுமல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலையை அவர் பிரதிபலித்திருக்கின்றார். அதிமுக தொண்டர்களின் மனநிலை நன்கு புரிய முடிகிறது.
இதயம் போல் தொண்டர்கள்
ஒரு மனிதன் உயிர் வாழவேண்டும் என்றால் இதயம் முக்கியம். அதுபோல் தான் ஒரு இயக்கம் சிறப்பாக இயங்க தொண்டர்கள் முக்கியம். இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணத்தையும் இயக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த இயக்கம் வலுவாக இருக்கும். அதிமுகவின் நிறுவன தலைவர், ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எம்ஜிஆர் வகுத்துத்தந்த பார்முலா, சட்ட விதி, அதை தான் இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார்'' என்றார்.