விலைவாசி உயர்வு-வேலையிழப்பு.. இலங்கையைபோல் இந்தியாவிலும் போராட்டம் வெடிக்கும். முத்தரசன் கணிப்பு
தேனி: இந்தியாவில் தாங்கி கொள்ள முடியாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை சகித்து கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் கோபத்தை வெளிப்படுத்த நல்ல நாளை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருப்பதால் இலங்கையை போல் இந்தியாவிலும் போராட்டம் நடக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் முத்தரசன் பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி முத்தரசன் கூறியதாவது:

வேலையில்லா திண்டாட்டம்
பிரதமர் நரேந்திரமோடி தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி பார்த்தால் கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வேலையில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக
அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் இந்திய பாதுகாப்பு துறையில் 4 ஆண்டு என்ற அடிப்படையில் இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். திமுக கடந்த ஓராண்டுக்கு முன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறும் தமிழக பாஜகவினர் கடந்த 8 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடியிடம் அதனை போராடி பெற்று தர வேண்டும்.

இலங்கையில் போராட்டம்
இலங்கையில் விலைவாசி உயர்வுக்கு அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் எனக்கூறி பெரும் போராட்டம் நடந்தது. மதம், இன, பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இது தன்னெழுச்சியாக நடந்தது. இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

இலங்கையை போல் இந்தியாவிலும்..
இலங்கையை போன்ற ஒரு போராட்டம் இந்தியாவில் நடைபெறாது என நரேந்திரமோடி நினைக்கிறார். நமது நாட்டில் மக்கள் மிகப்பொறுமையாக உள்ளனர். தாங்கி கொள்ள முடியாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர் என அர்த்தமில்லை. தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது இலங்கையை போல் இங்கும் ஒரு போராட்டம் நடக்கலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications