தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக மரத்தில் தொங்கிய மர்ம பார்சலால் பீதி
தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் இன்று கடைசி நாள் என்ற வாசகத்தோடு மர்ம பார்சல் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை நிற கைக்குட்டையால் பொதிந்து அதற்கு மேல் வெள்ளை நிற அட்டை வைக்கப்பட்டு மடித்து அந்த பார்சல் கட்டப்பட்டிருந்தது.

அதன்மேல் "இன்று கடைசி நாள்" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அந்த வாசகம் நவம்பர் 11 ஆம் தேதி எழுதியது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. நட்சத்திரங்களும் வரையப்பட்டு இருந்தன.
அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மர்ம பார்சல் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களையும் சிலர் அச்சத்தில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
அந்த பார்சலில் எழுதப்பட்ட வாசகமும், அது கட்டி வைக்கப்பட்டிருந்த விதமும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து அந்த பார்சலை அகற்றிவிட்டு சென்றனர்.
பின்னர் அதை பிரித்து பார்த்த போது அதில் வெற்று அட்டை மட்டும் இருந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சடைந்தனர். இதுகுறித்து தேனி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications