துரோகம் செய்தவர்களை சும்மா விடாதீங்க.. தேனியில் டிடிவி தினகரனை கடுமையாக அட்டாக் செய்த எடப்பாடி
தேனி: தேனியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, நோட்டோவுடன் போட்டி போடும் கட்சி தான் பாஜக என்று கூறியவர் டிடிவி தினகரன் என்றும், துரோகம் செய்தவர்களை சும்மா விடாதீர்கள் என்றும் பேசினார்.
தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் விடி நாராயணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இப்போது திமுக இதையும் கொடுக்காமல் நிறுத்திட்டாங்க. மீண்டும் அதிமுக அரசு அமையும். அப்போது மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். இதேபோல் ஏழை, எளிய மக்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்பட்டு வந்தது. இதையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். அப்போது இலவச வீடு வழங்கப்படும்.
ஸ்டாலின் இதுவரை எந்த கூட்டத்திலும் விவசாயிகளை பற்றி பேசவில்லை. இதுவரை இந்தியாவிலேயே விவசாயிகளை பற்றி பேசாத ஒரு முதல்வர் என்றால் அது ஸ்டாலின் தான். விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் என பல்வேறு சலுகைகளை அதிமுக அரசு வழங்கியது. இதேபோல் 5 லட்சம் முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது.
இதனையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தபட்டிருந்தது. அதையும் மூடிட்டாங்க. ஏழைகளுக்காக 2000 மினி கிளினிக் இருந்தது. இதையும் நிப்பாட்டி விட்டாங்க. திருமண உதவி திட்டம் தாலிக்கு தங்கம் திட்டத்தையும் திமுக அரசு ரத்து செய்துவிட்டது. இது தான் திமுகவின் சாதனை.
அதிமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது. நான் தலைவராக சொல்லவில்லை. ஒரு தொண்டனாக சொல்கிறேன். தனிப்பட்டவருக்கு சொந்தமான கட்சி அதிமுக இல்லை. 2 கோடி தொண்டனுக்கு சொந்தமான கட்சி அதிமுக கட்சி. உங்களை போல வாரிசு அரசியல் செய்யவில்லை. சில பேர் அதிமுகவை அபகரிக்க பார்த்தனர்.
தொண்டர்கள் துணை கொண்டு கட்சியை காப்பாற்றினோம். அத்தனை தொண்டர்களும் அதிமுகவை காக்க வேண்டும் என்று ஓரணியா திரண்டதினாலே அதிமுக காக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அதிமுக தமிழ்நாட்டில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
நோட்டோவுடன் போட்டி போடும் கட்சி தான் பாஜக என்று கூறியவர் டிடிவி தினகரன். மக்களை சந்திக்காதவர்களுக்கு வாக்களித்து என்ன பயன். எனவே துரோகம் செய்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். தேனியில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனும் திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications