அவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கும் கொடுங்க.. போடியில் ஓட்டுக்கு பணம் கேட்டு மக்கள் சாலைமறியல்
தேனி: தேனி மாவட்டம் போடியில் ஓட்டுக்கு பணம் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மக்களவை தொகுதி உள்பட தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளுக்கு(வேலூர் தவிர) நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேனியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் சார்பில் சாகுல் ஹமீதும், மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்.

தேனி விஜபி தொகுதி
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன், ஈவிகேஎஸ், தங்கதமிழ்செல்வன் என பிரபலமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் விஜபி தொகுதியாக தேனி காணப்படுகிறது.

பணம் விநியோகம்
இந்நிலையில் போடி டவுன் 1-வது வார்டு புதூர் நகரில், ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் பெற்றவர்கள் இது குறித்து மற்றவர்களிடம் தெரிவிக்கவே பணம் கிடைக்காதவர்கள் போடி-குரங்கணி சாலையில் திடீர் சாலை மறியலில் இறங்கினார்கள்.

பணம் கொடுங்கள்
இது குறித்து தகவல் அறிந்ததும் போடி டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து மக்களிடம் பேசினார்கள். அப்போது பொதுமக்கள் அப்பாவியாக ஒரு தரப்பினருக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு எங்களுக்கு பணம் தரவில்லை எனவே எங்களுக்கும் பணத்தை வழங்குபடி சொல்லுங்கள் என தெரிவித்தனர்.

போலீஸ் அதிர்ச்சி
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும். அதற்காக சாலை மறியல் ஈடுபடக்கூடாது என அவர்களை எச்சரித்தோடு கலைந்து செல்லவைத்தனர். இச்சம்பவத்தால் போடி நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications