தலை தப்பிச்சுச்சு.. அரசு மருத்துவமனையில் அறுந்து விழுந்த ஃபேன்! கைக் குழந்தையுடன் தப்பிய தாய்! ஷாக்!
தேனி: தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீரென மின்விசிறி கழன்று நோயாளியின் படுக்கையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிஷ்டவசமாக படுக்கையில் இருந்த தாயும் பச்சிளம் குழந்தையும் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அரசு மருத்துவமனையில் முறையாக பராமரிப்பு இல்லை எனவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுமார் 60 ஆண்டு கால பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் போடிநாயக்கனூர் மட்டுமின்றி சுற்றுப் புறங்களில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் ஏழை மக்கள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போடி அருகே உள்ள ஜக்கம்மா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண் இங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டில் உடைந்ததால், பக்கத்தில் உள்ள வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் பிரவீனா தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, அவரது படுக்கைக்கு நேராக மேலே இருந்த ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி, திடீரென அறுந்து பிரவீனாவின் படுக்கையின் மீது விழுந்தது.
மேலே ஏதோ வித்தியாசமாக சத்தம் கேட்டதை உணர்ந்த பிரவீனா உடனடியாக சுதாரித்து பக்கத்து படுக்கைக்கு குழந்தையுடன் தாவியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மின்விசிறி அறுந்து படுக்கையில் விழுந்த சம்பவம் சக நோயாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுடன் உள்நோயாளிகளாக இருந்த பெண்கள் கடும் அவதி அடைந்தனர்.
இருளில் தவித்ததுடன், குழந்தைகளுக்கு கைவிசிறி மூலமாக வீசிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணிக்கு மேல் வேறு ஒரு மின்விசிறி கொண்டு வந்து மாட்டப்பட்டு பின்னர் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளும், கழிவறைகளும் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் ஐந்தாயிரம் வரை கேட்பதாகவும், பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 2000 வரை கேட்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வசதி இல்லாத காரணத்தால் தான் ஏழை, எளிய மக்களான தாங்கள் அரசு மருத்துவமனைகளை தேடி வருவதாகவும், இங்கேயும் இப்படி பணம் பறித்தால் தாங்கள் என்ன செய்வது என்றும் புலம்பித் தவிக்கின்றனர். சுமார் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய இந்த அரசு மருத்துவமனையில், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் 20 பேர் மட்டுமே பணியாற்றுவதால் போதிய பராமரிப்பு பணிகளை செய்வதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குழந்தை பெற்றெடுத்து படுக்கையில் படுத்திருந்த பெண்ணின் படுக்கை மீது மின்விசிறி அறுந்து விழுந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications