எவ்வளவு தில்லு பாத்தீங்களா.. தேனி திமுக ஆபிசிலேயே ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்! சல்லடை போடும் போலீஸ்
தேனி: தேனி நகரின் மையப் பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி எம்பியும், மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், கொள்ளையர்களை கைது செய்வதற்காக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி நகரின் மையப் பகுதியான என்.ஆர்.டி.நகரில் திமுக வடக்கு மாவட்ட அலுவலகமும், திமுக வடக்கு நகர அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி எம்.பியுமான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக வடக்கு நகர் கழக செயலாளர் நாராயண பாண்டியன் ஆகியோர் இந்த கட்டிடத்தை தங்களது அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் இந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், கணிணிகள், ஹார்ட் டிஸ்க், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல அலுவலகத்தை திறக்கச் சென்றவர்கள் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தேனி நகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் தேனி நகர் காவல் துறையினர், தேனி எஸ்.பி.சிவப்பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இதில் லேப்டாப்புகள் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து போலீஸ் மோப்பநாய் மற்றும் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு தடயங்களை சேகரித்தனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கஞ்சா, துப்பாக்கி, கேமரா உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலிருந்தே பொது மக்கள் மீளாத நிலையில், தற்போது ஆளுங்கட்சியின் மாவட்ட அலுவலகம், அதிலும் குறிப்பாக தேனி எம்.பி.யின் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே கொள்ளையர்கள் குறித்து தனிப் படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி திமுக மாவட்ட கட்சி அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. கொள்ளை போன லேப்டாப்பில் திமுக உறுப்பினர் விவரங்கள் மற்றும் கட்சி நிகழ்வுகள் தொடர்பான முக்கிய விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து கொள்ளையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி உள்ளனர். மேலும் நகரில் வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்கின்றனர் தேனி போலீசார்.












Click it and Unblock the Notifications