வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்.. அடிப்பது போல் பாய்ந்த திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன்.. தேனியில் பரபரப்பு
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வனை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அடிப்பது போல் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் புகழ்பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. சுயம்புவாக லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சனி பகவான் கோவிலானது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு, ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து வழிபடுவார்கள்.

இந்த நிலையில் இன்று இந்த திருக்கோயிலில் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக மண்டபம் ஒன்று கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகள் நடந்து வந்தது. தொடர்ந்து காலையில் பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக திமுவை சேர்ந்த தேனி நாடாளுமன்ற எம்பி தங்க தமிழ்ச்செல்வன் வந்திருந்தார்.
அப்போது குச்சனூர் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மின் மயானம் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் கோஷமிட்டவாறு எம்பியை முற்றுகையிட்டனர். இதனால் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் எம்பி தங்க தமிழ்ச்செல்வன் காரை முற்றுகையிட்டனர்.
போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் காரை நாலாபுறமும் சுற்றி நின்றதால் திடீரென ஆவேசமடைந்த அவர் கார் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அடிப்பது போல் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications