வரிசை கட்டி வந்த கார்கள்.. ஓபிஎஸ்ஸுடன் எடப்பாடி டீம்! கலகல கைலாசபட்டி! இனிமே எல்லாம் அப்படித் தான்!
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் இன்று ஓபிஎஸ் ஆதரவு திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் எடப்பாடி அணியைச் சேர்ந்த நகர செயலாளர் உள்ளிட்ட 300 நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பத்தில் அதிர்ஷ்டமும் ஆதரவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தாலும் திடீரென மாறிய அரசியல் காலநிலையால் தற்போது அதிர்ஷ்ட காற்று ஓபிஎஸ் பக்கம் வீசி இருக்கிறது.
ஆதரவாளர்கள் எண்ணிக்கை சரிவு, மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, பொதுக்குழுவில் நடந்த அவமானம் என அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது மீண்டும் பாஜக தயவால் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

ஓபிஎஸ் ஆதரவு
சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ்சை சந்தித்த ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மா.செ. பதவி
இதனால் உற்சாகமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து அதிமுகவில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. மேலும் தனது அணியில் சேர்பவர்களுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகளை வழங்கி வருவதாக அதிமுக மாவட்ட அளவில் 2ஆம் கட்டம் 3வது கட்டமாக இருந்த நிர்வாகிகள் பதவி ஆசையில் ஓபிஎஸ் அணிக்கு தாவி வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இன்று தேனியில் ஓபிஎஸ்ஸை எடப்பாடி தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

ஆதரவு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் இன்று ஓபிஎஸ் ஆதரவு திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் மற்றும் இபிஎஸ் ஆதரவாளரான தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்.

இபிஎஸ் ஆதரவாளர்கள்
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வத்தை சந்தித்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஓபிஎஸ் வாழ்க ஓபிஎஸ் வாழ்க வருங்கால முதல்வர் வாழ்க என கோஷங்கள் எழுப்பி அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூ கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ்சை சந்திக்க வந்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தனர்.

கொங்கு மண்டலம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் அவருக்கு ஆதரவு தெரிவித்த திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில், மாண்புமிகு முன்னாள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பேணப்பட்டு, மிக அற்புதமாக நடந்து கொண்ட இந்த ஆட்சியில் இரண்டு முறை முதல்வராக புரட்சித் தலைவர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர் ஓபிஎஸ். இன்றைய நிகழ்வில் திருப்பூர் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டல மே எடப்பாடி கையில் உள்ளது போல் மாயையை உருவாக்கியுள்ளார். அதுபோன்று எந்த மாயையும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி என்று தெரிவித்தார்












Click it and Unblock the Notifications