உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு! பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்
தேனி: பிரிந்தவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் பேசி இருந்த நிலையில், ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். ஓபிஎஸ் சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, "நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு" என்ற பேனர் வைத்து வரவேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தென் மாவட்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். குறிப்பாக ஓபிஎஸ் சொந்த ஊரான தேனியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனிடையே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், பிரிந்தவர்கள் அனைவரையும் அதிமுகவில் விரைவில் இணைக்க வேண்டும் என்று கூறி 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இதனால் மீண்டும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தேனியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினரால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், எழுச்சிப் பயணமாக பெரியகுளம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வித்தியாசமாக பேனர் வைத்து அக்கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். அந்த பேனரில், நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு! அண்ணா திமுகவில் அனைவரும் உங்களோடு.. நீங்க மட்டும் போதும் தலைவா.. நாங்க இருக்கோம்!' என்ற வரிகள் இடம்பெற்றிருந்தது.
பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், அதற்கான பதிலடியாக இது அமைந்துள்ளது. அதேபோல், 'ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்.. கழகத்திற்காக உயிர் வருத்தி உழைக்கும் நீங்கள் மட்டும் போதும்!' என்றும் எழுதப்பட்டிருந்தது. உணர்ச்சிமயமாக தொண்டர்களும் நிர்வாகிகளும் பதாகைகளையும், பேனர்களையும் ஏந்தி நின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை பார்த்ததும், 'நீங்க மட்டும் எங்களுக்குப் போதும்' என்று உணர்வுபூர்வமாக குரல் கொடுத்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருப்பது அக்கட்சியின் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இருப்பினும் எடப்பாடி பழனிசாமி பயணத்தின் போது தேனியில் மட்டும் 3 இடங்களில் அதிமுகவினர் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஒரு இடத்தில் பெண்கள் பலரும் ஒன்றிணைவோம் என்று கோஷமிட்ட நிலையில், போடி மற்றுன் சங்கராபுரம் பகுதிகளிலும் ஒன்றிணைவோம் என்று அதிமுகவினர் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டனர்.












Click it and Unblock the Notifications