துரத்தும் சிறுத்தை மரணம்.. ஓ.பி.ரவீந்திரநாத் கைதாகிறாரா? தேனி ஆட்சியரகத்தை விவசாயிகள் முற்றுகை
தேனி: சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில் ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்ய வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளுடன் போராாட்டம் நடத்தினர்.
தேனி பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி தேனி எம்பியும் ஓபிஎஸ்ஸின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டமும் பண்ணையும் உள்ளன.
வன பகுதியையொட்டி உள்ள தோட்டம் என்பதால் இங்கு வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு சிறுத்தை சோலார் மின்வேலியில் சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மாண்புமிகு அமைச்சர் ரவீந்திரநாத் குமார்! ஓபிஎஸ்க்கு எடப்பாடி கொடுத்த மெகா ஆஃபர்! ஆனால் ஒரு சிக்கல்?
மின்வேலியில் சிறுத்தை
இதையடுத்து மின்வேலியில் சிக்கியிருந்த அந்த சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது அது அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அப்போது வனத்துறை ஊழியர் மகேந்திரனை தாக்கிவிட்டு சென்றுவிட்டது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி அந்த பகுதியில் மின்வேலியில் சிக்கியிருந்த சிறுத்தை உயிரிழந்து கிடந்ததாக தெரிகிறது.
வனத்துறை
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களை அழைத்தனர். அங்கு சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திலேயே அந்த சிறுத்தை புதைக்கப்பட்டது. இந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் எம்பியின் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டு மந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
சிறுத்தையின் சாவில் சந்தேகம்
இந்த நிலையில் சிறுத்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் சிறுத்தை உயிரிழந்தது எப்படி என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் முதற்கட்டமாக பண்ணை மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். ஓபி ரவீந்திரநாத்தின் தோட்டத்திற்கு அடிக்கடி சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆடுகளுடன் வந்த விவசாயிகள்
இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கால்நடை வளர்ப்போர் தேனி ஆட்சியர் அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை முன்பு திரண்டனர். அவர் மினிவேனில் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஆடுமேய்க்கும் தொழிலாளி அலெக்ஸை கைது செய்ததை கண்டித்து ஆடுகளை கொண்டு வந்தனர்.
தர்ணா போராட்டம்
ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டக்காரர்கள் சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.