டார்கெட் தேனி! ஓபிஸ் மண்ணில் களமிறங்கிய முன்னாள் சிஷ்யர்! தொண்டர்களுடன் ஆர்ப்பரித்த ஆர்.பி.உதயகுமார்
தேனி : ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பிரம்மாண்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி தனது செல்வாக்கினை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்பியதால் இதற்காக ஆர்.பி.உதயகுமார் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், அது ஓரளவு கைகொடுத்தும் உள்ளது.
Recommended Video
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து 25ஆம் தேதியான நேற்று அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்,
அதன்படி அதிமுக சார்பில் மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட அதிமுக அமைப்பு மாவட்டங்களில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தவிர, மற்ற 6 மாவட்டங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உள்ள கன்னியாகுமரி, தேனி, திருச்சி வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி கிழக்கு அசோகன், தஞ்சாவூர் வைத்தியலிங்கம், தஞ்சாவூர் வடக்கு சுப்பிரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருக்கும் நிலையில், இன்று வேறு மாவட்ட முன்னாள் அமைச்சர்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

தேனியில் ஆர்ப்பாட்டம்
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பிரம்மாண்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி தனது செல்வாக்கினை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்பியதால் இதற்காக ஆர்.பி.உதயகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார். உள்ளூர் தொண்டர்களை அழைத்துச் செல்லக்கூடாது என ஓபிஎஸ் குடும்பத்தினர் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு உள்ள தொண்டர்கள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்காக மதுரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மிக முக்கியத்துவம்
இந்நிலையில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் தேனி நோக்கி எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் படை எடுத்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கி ஆர்.பி.உதயகுமார் அழைத்துச் சென்றார். ஓபிஎஸ் அதிமுகவில் நகர செயலாளராக பதவி ஏற்ற நாள் முதல் சுமார் 25 ஆண்டுகளாக அவர் இல்லாமல் தேனியில் எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியும் நடந்தது கிடையாது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஓபிஎஸ் இல்லாமல் குறிப்பாக அவருக்கு எதிராகவே நடைபெறும் இந்த போராட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காவல்துறையினர் தீவிரம்
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெறும் தேனி நகரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது காவல்துறை. தேனி மாவட்டம் முழுவதும் கம்பம், ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அஇஅதிமுக தொண்டர்களை வேன் மூலம் ஏற்றி சென்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேனி பங்களாமேட்டிற்கு வருவதற்கு அதிமுகவின் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையின் ஆகியோர்கள் தலைமையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

பரபரப்பு
அதை தொடர்ந்து ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊர் என்பதால் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்கள் எங்கும் கலவரமோ பிரச்சனையோ செய்து விடக்கூடாது என்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து அனைத்து போலீசாரும் தேனி மாவட்டம் முழுவதும் குழுவிக்கப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி முழுகட்டுப்பாட்டையும் போலீசார் தன்வசம் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications