குலுங்கிய கொங்கு.. உடைந்த "மாயை".. ஒரே இரவில் எடப்பாடியை ஆட்டி படைத்த ஓபிஎஸ்.. எப்படி நடந்தது?
தேனி: எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்காத ஒன்று.. ஆனால் பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் அதிமுகவில் திடீரென நடந்து உள்ளது..
அதிமுகவிற்குள் தற்போது உட்சபட்ச மோதல் நடந்து கொண்டு இருக்கிறது. ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும். என் தலைமைக்கு கீழ் மெகா கூட்டணி அமைப்போம். இத்தோல் அமமுக கட்சிக்கு எல்லாம் இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இன்னொரு பக்கம் அதிமுகவை நாங்கள் அரை சதவிகிதம் கூட எங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று டிடிவி தினகரனும் சொல்லிவிட்டார். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நண்பர்களை விட.. எதிரிகள்தான் அதிகமாகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக அப்செட்
முக்கியமாக சமீபத்தில் பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு காரணமாக பாஜக தரப்பு கடுமையாக அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு வந்த அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்பது பற்றிய கேள்விக்கு, . அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

மாற்றம்
இந்த நிலையில்தான் எடப்பாடி பேச்சை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த டாப் நிர்வாகிகள் திடீரென ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு தாவி உள்ளனர். திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு பெரிய டீம் அப்படியே எடப்பாடி டீமில் இருந்து ஓ பன்னீர்செல்வம் டீமிற்கு சென்று உள்ளது. மாவட்ட துணைச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமாரும் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து உள்ளார். அதேபோல் தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுள்ளார். இவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.

எத்தனை பேர்
மொத்தமாக 350 நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து உள்ளனர். தேனியில் உள்ள ஓ பன்னீர்செல்வம் வீட்டில் அவரை சந்தித்து இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்வாகிகளிடம் நாம் பேசியதில்.. ஓ பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் உண்மையான தலைவர். அவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன். அவருக்குத்தான் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பலர் அப்செட்டில் இருக்கிறார்கள். கொங்கு மண்டலமே அவருடைய கையில் இருப்பதாக ஒரு மாயை நிலவுகிறது. ஆனால் அதில் உண்மை எல்லாம் இல்லை. அந்த மாயை தற்போது உடைந்துவிட்டது. இது தொடக்கம்தான். இன்னும் பல நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு வருவார்கள். எடப்பாடி கூடாரம் காலியாக போகிறது, என்று எடப்பாடி அணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

எப்படி நடந்தது?
ஓ பன்னீர்செல்வம் நேற்று முதல்நாள் நடத்திய மீட்டிங் அதன்பின் அன்று இரவே செய்த சில போன் கால்கள்தான் இந்த அதிரடிக்கு காரணம் என்கிறார்கள். நேற்று முதல்நாள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ பன்னீர்செல்வம் தனது தொண்டர்களை சந்தித்தார். இன்று சுமார் 2 மணி நேரம் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கிறார். எடப்பாடி கேம்பில் இருந்து வெளியேறி ஓ பன்னீர்செல்வம் கேம்பில் ஐக்கியம் ஆன நிர்வாகிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

என்ன சொன்னார்?
இதில்தான் எடப்பாடி அணியில் இருக்கும் நிர்வாகிகளை மொத்தமாக தூக்குவது பற்றி ஓ பன்னீர்செல்வம் பேசி இருக்கிறாராம். இதில் பேசிய எடப்பாடி கேம்பின் எக்ஸ் நிர்வாகி ஒருவர்.. எடப்பாடி தேவையின்றி அமித் ஷா பற்றி பேசுவிட்டார். அவர் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார். வார்த்தையைவிட்டுவிட்டார்.. பாஜகவில் பலரும் அப்செட் என்று பேசி இருக்கிறார். இந்த நேரத்தில் எடப்பாடி ஆட்களுக்கு வலை வீசினால் பலர் நம் பக்கம் வருவார்கள். பாஜகவை பகைத்துக்கொள்ள பலர் விரும்ப மாட்டார்கள் என்று கூறி இருக்கிறாராம். அதோடு எடப்பாடியின் பேச்சை அவருக்கு நெருக்கமாக இருக்கும் மாஜி அமைச்சர்களே விரும்பவில்லையாமே.. எங்கே எடப்படியால் நம்ம வீட்டுக்கு ரெய்டு வருமோ. எடப்பாடி தேவையின்றி பேசியதால் நாம் சிக்கலில் மாட்டிகொள்வோமோ என்று மூத்து நிர்வாகிகள் பலர் அச்சத்தில் இருக்கிறார்களாம் என்றும் பேசி இருக்கிறார். இதையடுத்தே ஓ பன்னீர்செல்வம் கொங்கு மண்டல நிர்வாகிகள் சிலருக்கு கால் செய்து உள்ளார். அதன்பின்பே கொங்கு மண்டலத்தில் இருந்து நிர்வாகிகள் கேம்ப் அப்படியே ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து உள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலர் இப்படி அணி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications