பிரான்ஸ் பெண்ணை கரம் பிடித்த தேனி இளைஞர்.. தமிழ் கலாசார முறைப்படி நடந்த திருமணம்
தேனி: தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் கலைராஜன் என்பவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை, தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டிற்கு படிக்க போன கலைராஜன், அங்கு மரியம் என்ற பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் தேனி அருகே வீரபாண்டியில் திருமணம் நடந்துள்ளது.
தேனி அருகே முத்துதேவன்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் போஜன். அவருடைய மனைவி காளியம்மாள். இவர்களுடைய மகன் கலைராஜன் (வயது 31). கலைராஜன் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் உயர் படிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் படித்து கொண்டிருந்தார். அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மரியம் (30) என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாகி உள்ளது,.

திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்பது போல், செல்வம் தேடி சென்ற கலைராஜன், அங்கு காதலில் விழுந்துள்ளார். இந்த காதல் விவகாரம் குறித்து இருதரப்பு பெற்றோரிடம் இருவருமே தெரிவித்தனர். இவர்களின் பெற்றோர்கள் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கலைராஜனுக்கும், மரியத்துக்கும் பிரான்ஸ் நாட்டில் கடந்த மே மாதம் பிரெஞ்சு கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்தது.
இருப்பினும் கலைராஜன் தனது சொந்த ஊரில் உறவினர்கள் மத்தியில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதையொட்டி நாடு திரும்பிய கலைராஜன் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி, தனதுதிருமணத்திற்கு வரும்படி வரவேற்றார். உற்றார், உறவினர்கள் சூழ, தேனியை அடுத்த வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை கலைராஜனுக்கும், மரியத்துக்கும் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் இனிதே நடந்தது. மரியம் பட்டுச்சேலை அணிந்திருந்த நிலையில், கலைராஜன் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.
தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி கெட்டிமேளம் முழங்க மரியத்துக்கு தாலி கட்டி கலைராஜன் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 2 பேரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.. இந்த திருமண விழாவில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி மரியத்தின் உறவினர்களான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். பிரான்ஸ் நாட்டில் வந்த பலரும் தமிழர் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்திருந்தனர். கிட்டத்தட்ட கோவா படத்தில் வரும் காட்சியைப் போலவே திருமண மண்டபம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications