கருணாநிதி எம்ஜிஆரின் நட்பு... அரசியல் நாகரீகம் பற்றி தேனியில் நினைவு கூர்ந்த ஸ்டாலின்
கருணாநிதி என்று பெயரை சொன்னதால் அவரோடு காரில் வந்தவரை இறக்கி விட்டவர் மக்கள் தலைவர் எம்ஜிஆர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேனி: மக்கள் தலைவர் எம்ஜிஆருக்கும் தனது தந்தை கருணாநிதிக்கும் இடையில் இருந்த அரசியல் கடந்த நட்பைப் பற்றி இன்று தேனியில் நினைவுகூர்ந்தார் மு.க ஸ்டாலின்.
Recommended Video
கருணாநிதி என்று பெயரை சொன்னதால் அவரோடு காரில் வந்தவரை இறக்கி விட்டவர் மக்கள் தலைவர் எம்ஜிஆர். எனக்கே தலைவர் கலைஞர்தான் அவர் பெயரை சொல்லலாமா என்று இறக்கி விட்டவர் எம்ஜிஆர் என்று தேனியில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அத்தகைய அரசியல் நாகரீகத்தை இப்போது உள்ளவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது எதிர்பார்க்கவும் கூடாது என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். கருணாநிதி எம்ஜிஆர் இடையே ஏற்பட்ட அறிமுகம் நட்பு பற்றி நாம் பார்த்து விட்டு முதல்வர் ஸ்டாலின் ஏன் இன்றைய தினம் அதை கூறினார் என்று பார்க்கலாம்.

கருணாநிதி எம்ஜிஆர் நட்பு
கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான, எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் ராஜகுமாரி. இந்த திரைப்படத்தின் போதுதான் இருவருக்கும் நட்பு தொடங்கியது. அடுத்ததாக மருதநாட்டு இளவரசி படத்துக்கு கருணாநிதிதான் வசனம் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்ரபாணியும் ஆசைப்பட்டனர். எனவே, திருவாரூரில் இருந்து சென்னை வரும் படி கருணாநிதிக்கு கடிதம் எழுதினர். அதன் பேரில் சென்னை வந்த அவர் ராம.அரங்கன்னல் அறையில் தங்கி இருந்தார்.

திமுகவில் இணைந்த எம்ஜிஆர்
காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்து விலகி தி.மு.க வில் இணைந்தார். அப்போது கருணாநிதி பங்கேற்ற கல்லுக்குடி போராட்டத்தின் காரணமாகப் போடப்பட்ட கல்லுக்குடி வழக்கு நிதிக்காகவும், கழக நிதிக்காகவும் எம்.ஜி.ஆரின் நாடகக் கம்பெனி சார்பில் நாடகங்கள் நடத்தப்பட்டன. அப்போது கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு மேலும் வலுப்பட்டது.

அண்ணாவின் தம்பிகள்
கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டு இவர்கள் என் தம்பிகள் என்று அண்ணா அடிக்கடி சொல்வார். அண்ணா மறைந்தபோது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர் எம்ஜிஆர்.

கருணாநிதியை மதித்தவர் எம்ஜிஆர்
தனிக்கட்சி தொடங்கி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபோதும் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்புத் தொடர்ந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்டப்பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கருணாநிதி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தபோது அதனை கண்டித்தவர் எம்.ஜி.ஆர். பல்வேறு அரசு விழாக்கள், பல்வேறு நிகழ்வுகளில் கருணாநிதியும்,எம்.ஜி.ஆரும் இணைந்து கலந்து கொண்டிருக்கின்றனர்.

காரில் இருந்து இறக்கி விட்டவர்
அரசியலைக் கடந்த நண்பர்களாகவே இருந்தனர். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்று கூறுபவர். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர். அதைத்தான் இன்றைக்கு தேனியில் மேடையில் பேசிய போது நினைவூட்டினார் மு.க ஸ்டாலின்.

அரசியல் நாகரீகம்
அப்படிப்பட்ட அரசியல் நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக் கூடியவர்களிடம் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான் என்றார். கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று சொன்ன போது அதை ஆதரிக்காதவர்களைப்பற்றி மறைமுகமாக குறிப்பிட்டா மு.க ஸ்டாலின். ஆனால் இதன் மூலம் மக்களிடம் தாங்கள் யார் என்பதை அவர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

ஒத்துழைப்பு தேவை
அனைத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு என்னை நான் ஒப்படைத்து செயல்படுவேன் என்று சொன்னார். அப்படி செயல்படும் போது அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications