எதிர்க்கட்சி தலைவர் தேர்வு... போடியில் ஓபிஎஸ்சை திடீரென சந்தித்த கேபி முனுசாமி.. ஆலோசனை
தேனி: எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் போடியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து கே.பி.முனுசாமி ஆலோசனை நடத்தினர்.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் தோற்கடித்தார். கடும் போராட்டத்திற்கு பின்பே இந்த வெற்றி ஓபிஎஸ்க்கு சாத்தியமானது.
தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அத்துடன் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக இந்த முறை ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது.
யோகி ஆளும் உ.பி.யில்.. ஆம்புலன்சில் அதிக பணம் கேட்டதால்.. கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற பெண்
7ம் தேதி முதல்வர்
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றது. திமுக 133 இடங்களையும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி பெற்றன. திமுக வெற்றியை தொடர்ந்து தனிப்பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதல்வராக உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்
அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதில் அதிமுக - 65 இடங்களையும், பாமக - 5 இடங்களையும், பாஜக - 4 இடங்களையும் இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக கூட்டம்
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 7-ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது.
கேபிமுனுசாமி -ஓபிஎஸ்
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில், போடியில் உள்ள வீட்டில் தங்கி உள்ள ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வேப்பனஹள்ளி எம்எல்ஏ கேபி முனுசாமி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுகவில் பரபரப்பு
அப்போது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு விஜயபாஸ்கர் உள்பட சிலர் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ்சை முனுசாமி சந்தித்திருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.