குடியிருப்பில் புகுந்த சிறுத்தை.. கம்பத்தில் வனக்காப்பாளரின் தலையில் கடித்து ஓட்டம்! உஷார் மக்களே
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் திடீரென குடியிருப்புக்குள் சிறுத்தை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புதருக்குள் தேடிச்சென்ற வனக்கப்பாளரின் தலையில் சிறுத்தை கடித்துவிட்டு ஓடியது. இன்னும் சிறுத்தை பிடிபடாததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கம்பம் உள்ளது. இயற்கை எழில் சூழந்து கம்பம் காணப்படும். இந்நிலையில் தான் கம்பம் நகராட்சியின் கோம்பை ரோடு குடியிருப்பு பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார்.

இன்று காலையில் அவரது வீட்டு அருகே வித்தியாசமாக ஏதோ விலங்கு நடமாடுவதாக நினைத்தார். இதையடுத்து அவர் அருகே செடிகள் நிறைந்த புதருக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்க முயன்றது.
ஆனால் சிறுத்தையை முன்கூட்டியே பார்த்த ஈஸ்வரன் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து இன்னொரு இடத்துக்கு சென்றது. இதனால் பீதியடைந்த ஈஸ்வரன் உடனடியாக வனத்துறை, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக வனத்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த செடிகள் நிறைந்த புதரில் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.
இந்த பணியில் வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியனும் ஈடுபட்டார். அப்போது சிறுத்தையை ரகுராம் பாண்டியன் நெருங்கியுள்ளார். ஆனால் அவர் சிறுத்தையை பார்க்கவில்லை. மாறாக ரகுராம் பாண்டியன் நெருங்கி வருவதை பார்த்த சிறுத்தை புதருக்குள் இருந்து பாய்ந்து ரகுராம் பாண்டியனின் தலையில் கடித்துவிட்டு ஓடியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரகுராம் பாண்டியனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தற்போது வரை சிறுத்தை என்பது சிக்கவில்லை. சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை, போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் சிறுத்தை நடமாட்டம் பற்றி மைக் - ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக கம்பம் கோம்பை ரோடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் முடங்க தொடங்கி உள்ளனர். இதற்கிடையே வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியனை சிறுத்தை பாய்ந்து தாக்கியது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications