தங்கதமிழ்மகனா? தங்கதமிழ்ச்செல்வனா?... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொதப்பல்
தேனி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் தங்கதமிழ்ச்செல்வன் விருது பெற்றதாக பேசி மேடையில் இருந்தவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
தேனி மாவட்டம் சுருளியில் நடைபெற்ற சாரல் விழாவில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பி.எஸ்.பெற்ற விருதின் பெயரை மாற்றி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் தங்கத் தமிழ்மகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல்
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை அவ்வப்போது வேடிக்கையாக பேசி கூட்டத்தில் கலந்துகொண்டோரை கலகலக்க வைப்பார். மேலும், சர்ச்சை கருத்துக்களுக்கும் அவரிடம் பஞ்சம் இருக்காது. மறதி காரணமாக பல நேரங்களில் பல விவகாரங்களை அவர் மாற்றி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புகழாரம்
தேனி மாவட்டம் சுருளியில் நடைபெற்ற சாரல் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன், ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பி.எஸ்.க்கு புகழாரம் சூட்டினார்.

விருது பெயர்
இதனிடையே அண்ணன் ஓ.பி.எஸ்.க்கு அமெரிக்காவில் தங்கதமிழ்ச்செல்வன் விருது கொடுத்திருக்கிறார்கள் என அவர் பேச, மேடையில் இருந்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. உடனடியாக பேச்சை நிறுத்தி விட்டு, ஓ.பி.எஸ்.சை நோக்கி அது என்ன விருதுன்னே என சீனிவாசன் கேட்க, அவரோ தங்கத்தமிழ்மகன் விருது எனக் கூறினார்.

பரவாயில்லை
இந்நிலையில் மீண்டும் பேச்சைத் தொடர்ந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இருந்துட்டு போகட்டும் தங்கதமிழ்ச்செல்வனும் நம்மாளுதான் அதனால் நான் பேசியதில் தவறில்லை என சமாளித்தார். இப்படி அமைச்சர் சொதப்புவதை பார்த்து கூட்டத்தில் கலந்துகொண்டோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

விதிமீறல்
சுருளி சாரல் விழா நடைபெற்ற இடம் வன சரணாலயத்திற்குட்பட்ட பகுதியில் இருந்தும் அங்கு விதிமுறைகளை மீறி வெடி வெடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்கும் வகையில் உள்ளூர் அதிமுகவினர் வெடி வெடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications