தேனி அருகே மருமகனை வித்தியாசமான முறையில் ஏமாற்றிய மாமியார்.. தலைசுற்ற வைத்த செயல்
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமது உவைஸ் என்பவர் தமிழக டிஜிபிக்கு மனு அளித்திருக்கிறார். அவரை அவரது மாமியாரும், மைத்துனரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளனர். என்ன மோசடி செய்தார்கள். அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது தொடர்பாக அவரது மாமியார் மற்றும் மைத்துனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 35 வயதாகும் முகமது உவைஸ் என்பவர் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார் அந்த புகார் மனு தேனி மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவில் முகமது உவைஸ் கூறுகையில், " தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது உவைஸ் ஆகிய நானும், தேனி மாவட்டம் கம்பம் தத்தப்பன்குளத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகள் இர்பான ஜெனிபரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்தோம்.
எங்களுக்கு முகமது சுகர்னோ என்ற மகன் உள்ளான்.

நான் கடந்த 2020-ம் ஆண்டு துபாயில் வேலை பார்த்தேன். என்னுடைய மனைவி இர்பான ஜெனிபர் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றினார். அப்போது வாகன விபத்தில் அவர் இறந்து விட்டார். கொரோனா காலகட்டம் என்பதால், அவருடைய இறுதிச் சடங்கில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் எனது மாமியார் அலிபாத்திமா, மைத்துனர் அமீர் சுல்தான் ஆகியோர் நான் துபாயில் இருந்தபோது நானும் எனது மனைவியும் மத வழக்கப்படி விவாகரத்தாகி விட்டதாக போலியான பத்திரத்தை தயார் செய்து கொடுத்ததுடன், எனது மனைவியின் இறப்பு சான்றிதழில் எனது பெயரை சேர்க்காமலும் இருந்து விட்டனர்.
அத்துடன் என்னுடைய மகனின் முகமது சுகர்னோ என்ற பெயரை நீக்கிவிட்டு தனீர் அகமது என ஆதார் அட்டையில் பெயரை மாற்றியுள்ளார்கள். இதுகுறித்து கேட்டபோது, மனைவி வாகன விபத்தில் இறந்தமைக்கு காப்பீட்டு தொகையை பெற வேண்டும் என்ற உட்கருத்துடன் போலியான பத்திரத்தை தயார் செய்துள்ளனர். பின்னர் அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்தி மோசடி செய்து விட்டனர்" என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் அலிபாத்திமா, அமீர் சுல்தான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications