எடப்பாடி பழனிசாமி 27 நாட்களில் கைதாவார்! பிரச்சாரத்தில் முத்தரசன் பரபரப்பு பேச்சு!
தேனி: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்னும் 27 நாட்களில் கைதாவார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
திமுகவின் ஆட்சியை கலைத்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்பதாகவும் அது ஒரு போதும் நடக்காது எனவும் அவர் பேசியிருக்கிறார்.
பிரச்சாரக் களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ள இந்த தகவல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முத்தரசன், எடப்பாடி பழனிசாமி இன்னும் 27 நாட்களில் கைது செய்யப்படுவார் எனப் பேசி அதிர வைத்திருக்கிறார். பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை போல் அவரும் விரைவில் கைதாவார் எனக் கூறியிருக்கிறார் முத்தரசன்.

27 மாதங்களில்
மேலும், திமுக ஆட்சி கலைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டு வருவதாகவும் அவரது எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார். 27 மாதங்களில் திமுக ஆட்சி கலைக்கப்படும் என எடப்பாடி பேசுகிறார் என்றும் ஆனால் அவர் இன்னும் 27 நாட்களில் சிறைக்கு செல்வது உறுதி எனவும் கூறியிருக்கிறார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முத்தரசன் கூறியுள்ள இந்த தகவலை முழுமையாக புறந்தள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வார்த்தைப்போர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டமன்றம் முடக்கம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அதிகம் பேசி வருகிறார். இது திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை கடுமையாக கோபம் கொள்ளச் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆட்சி கலைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசியது ஆளும்தரப்பை கொதித்தெழ வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

வழக்குகள் பாயலாம்
இதனால் விரைவில் எடப்பாடி பழனிசாமி மீது சில முக்கிய வழக்குகள் பாயலாம் என கூறப்பட்ட நிலையில், அதனை உறுதிசெய்யும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் போடி பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக முக்கியப் புள்ளிகள் பலர் மீது அடுத்தடுத்து அஸ்திரங்களை வீச ஆளும்தரப்பு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications