பல மணி நேரத்துக்கு பிறகு.. தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்பு
தேனி: பிரமாண பத்திரம் தாமதமாக பதிவேற்றம் செய்ததை சுட்டி காட்டி அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தேனி தொகுதியில் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது. தொடர்ந்து பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு அவரது வேட்பு மனு தேர்தல் அலுவலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு பரிசீலனையின் போது, டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம் செய்ததை கட்டி அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிடிவி தினகரனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வந்தது.
தொடர்ந்து பலமணி நேர பரிசீலனைக்கு பிற்கு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போல், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் ஜாதி சான்றிதழ் குறித்து சில சந்தேகங்களை எழுப்பி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதேபோல், தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.












Click it and Unblock the Notifications