கோயில் கோயிலாக போய் மனம் உருகி வேண்டி வரும் ஓபிஎஸ்... என்ன வேண்டுதல் தெரியுமா?
தேனி: தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றிக்காகவும், அதிமுகவின் வெற்றிக்காகவும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். கோயில் கோயிலாக வேண்டி தரிசனம் செய்து வருகிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை தேனி தொகுதி மக்களவை வேட்பாளராக போட்டியிட நிர்வாகிகளிடம் பேசி அனுமதி வாங்கினார்.
அதன்படி அதிமுக வேட்பாளராக ரவீந்திரநாத் போட்டியிட்டார். மிகப்பெரிய அளவில் ரவீந்திரநாத்துக்காக தேனியில் அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.

அமைச்சர்கள் பிரச்சாரம்
பிரதமர் நரேந்திர மோடியே தேனிக்கு வந்து ஓ பன்னீர்செல்வம் மகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, என அமைச்சர்கள் பட்டாளமும் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்காக பிரச்சாரம் செய்தனர்.

தேனியில் கடும் போட்டி
இதனிடையே அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும், திமுக சார்பில் ஈவிகேஎஸ்இளங்கோவனும் தேனியில் ரவீந்திரநாத்தை எதிர்த்து களம் இறங்கினர். இதனால் தேனியில் கடும் போட்டி நிலவியது. ஒருவழியாக கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தலும் முடிந்தவிட்டது.

ஆண்டாள் தரிசனம்
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் குடும்பத்தோடு சென்று பூஜையில் கலந்து கொண்டு நேற்று தரிசனம் செய்தார். இதேபோல் ஓ பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அவரது குலசாமி கோயிலிலும் நேற்று தரிசனம் செய்தார்.

ஒபிஎஸ் தரிசனம்
இதனிடையே வைகாசி விசாகத் தினம் அன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசம் பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் துணை முதலவர் ஒ பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போதும், மகன் ரவீந்திரநாத்துடன் வாரணாசி சென்று காசிவிஸ்வநாதரை தரிசனம் செய்தார்.

ஓபிஎஸ் பிரார்த்தனை
தனது மகன் ரவீந்திரநாத்தின் வெற்றிக்காகவும், அதிமுகவின் வெற்றிக்காகவும் தான் இப்படி ஊர் ஊராக போய் தரிசனம் செய்துவருவதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஒ பன்னீர்செல்வத்தின் பிரார்த்தனை நிறைவேறுமா என்பது மே 23ம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications