அய்யோ.. இப்படியும் சாவு வருமா? பற்றி எரிந்த ஆம்னி பஸ்.. தேனியில் போலீஸ் ஏட்டு மரணம்
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், ஆம்னி பஸ் மற்றும் பைக் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சின்னமனூர் போலீஸ் ஏட்டு ராமகிருஷ்ணன் உடல் கருகி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து பெங்களூருவுக்கு திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளே இருந்தனர். ஆம்னி பேருந்தை உத்தமபாளையத்தை சேர்ந்த 45 வயதாகும் பீர்முகமது ஓட்டினார். உத்தமபாளையத்தை அடுத்த துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் அந்த பேருந்து இரவு 9.45 மணி அளவில் வந்தது.

அப்போது சின்னமனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் (40) இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்னி பேருந்தும், ஏட்டு ராமகிருஷ்ணனின் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில், இருசக்கர வாகனம் பேருந்தின் முன்பகுதியில் சிக்கியது. அதேபோல் மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதியில் இருந்த பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிந்தது. இதனால் முன்பகுதி பற்றி எரிந்ததுடன், மோட்டார் சைக்கிளில் வந்த ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே பேருந்து தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அதில் வந்த பயணிகள் அலறியடித்தபடி பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினர். இதனால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். டிரைவரும் சுதாரித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினார். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர், அங்கு தீயணைப்பு படையினர் தீப்பிடித்து எரிந்த பேருந்து மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். சுமார் அரை மணி நேரம் போராடி பேருந்தில் எரிந்த தீயை அணைத்தார்கள்.

இதனிடையே தீயில் உடல் கருகி உயிரிழந்த ஏட்டு ராமகிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆம்னி பேருந்தில் மோதி பலியான ராமகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். சின்னமனூர் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications