இன்று ஜெயலலிதா இல்லை.. ஆனால் மோடி இருக்கிறார்.. தேனியில் பரிவட்டம் கட்டி இறங்கிய டிடிவி தினகரன்!
தேனி: தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல் இருந்தேன், ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் தான் என்னை தேனியில் போட்டியிட அழைத்தனர் என அமமுக பொதுச் செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, புதிய நீதிக் கட்சி, தமாகா, தமிழர் மக்கள் முன்னேற்றக் கழகம், ஐஜேகே, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தேனியில் பிரச்சாரத்தை தொடங்கிய தினகரன்: பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அமமுகவுக்கு, இந்த தேர்தலில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக தேனி, திருச்சி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி தேனியில் தினகரனும், திருச்சியில் செந்தில்நாதனும் போட்டியிடுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்தார். அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.
அம்மா இல்லை, மோடி இருக்கிறார்: தேனி பெரியகுளத்தில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் தரிசனம் செய்து, பிரசாரத்தை துவக்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "நாடாளுமன்ற உறுப்பினராக அம்மா அவர்களிடம் கோரிக்கை வைத்து தேனி மக்களுக்காக நிறைவேற்றி தந்தேன். இப்போது அம்மா இல்லை, ஆனால் நம்மோடு பிரதமர் மோடி இருக்கிறார். மீண்டும் 3வது முறையாக அவர் தான் பிரதமராக வரப்போகிறார்.
தேனி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடியிடம் சொல்லி பெற்றுத் தருவேன். தேனியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தேனி மக்கள்தான் முடிவு செய்வார்கள். அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான். அங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் என்னுடைய முன்னாள் நண்பர்தான்.
அரசியலில் பிறந்த மண் தேனி: தேனி மக்கள் என்னை அவர்களது வீட்டு பிள்ளையாக கருதுகின்றனர். நான் தேனி தொகுதிக்காக அயராது உழைத்துள்ளேன். நான் பிறந்தது தஞ்சாவூர், நான் அரசியலில் பிறந்தது தேனி மண். இப்பகுதியில் நான் மக்களோடு மக்களாக பணியாற்றி உள்ளேன். மக்கள் செல்வன் என்ற பட்டமே எனக்கு கிடைத்துள்ளது. பிரசாரத்தில் எனக்கு வரும் வரவேற்பை பாருங்கள்.
டிடிவி தினகரன் என்பதற்கு விரிவாக்கமாக தொகுதிக்கு தவறாமல் வருபவன் தினகரன் என்று ஒரு கல்லூரி விழாவில் என்னை பற்றி சொன்னார்கள். மக்கள் கொடுத்த அங்கீகாரம் அது. நான் தேனி மக்களில் ஒருவன் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இங்கு போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர்.
ஓபிஎஸ், ரவீந்திரநாத் தான் என்னை அழைத்தனர்: தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல் இருந்தேன். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் ஆகியோர் தான் என்னை தேனியில் போட்டியிட அழைத்தனர். கடந்த மாதம் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளின்போது என்னை நீங்கள் தான் போட்டியிட வேண்டும் என அழைத்தார் ரவீந்திரநாத். அதன் பிறகுதான் நான் அது பற்றியே யோசித்தேன்.
போட்டியிட்டால் தேனியில் போட்டியிடலாம் என ஓபிஎஸ்ஸிடம் கூறினேன். அதை அவர் புரிந்துகொண்டு எனக்கு வழிவிட்டு அவர் இன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். தேனியில் மீண்டும் பணியாற்ற காலம் ஒரு வாய்பை தந்துள்ளது. மீண்டும் எனக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள். எதையும் செயலில் காட்டுபவன் நான்.
பாஜக கூட்டணி தொடரும்: தொகுதி வளர்ச்சிக்கு துணையாக இருப்பேன். தமிழகத்தின் அனைத்து வளர்ச்சிக்கும், திட்டங்கள் பெறுவதிலும் முனைப்புடன் செயல்படுவேன். கடந்த 10 ஆண்டுகாலமாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்பவர் பிரதமர் மோடி. பொருளாதாரம், உலக அளவில் முன்னேறி உள்ளது. அவர் மீண்டும் பிரதமராவார். இது ஊரறிந்த உண்மை. பிரதமரே நம்மோடு இருப்பதால் அனைத்து திட்டங்களையும் உரிமையோடு பெற்று தருவேன். இதனால் நானும் மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். வரும் காலத்திலும் பாஜக உடனான கூட்டணி தொடரும்." எனத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - தினகரன்: முன்னதாக, "நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் தேனியில் தான் இருக்கும். தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பினர். அதேவேளையில், தினகரனின் விருப்பத்துக்கு இணங்க நன்றிக் கடனாக தேனி தொகுதியை அவருக்கு விட்டு கொடுத்து இருக்கிறோம்" என்று ஓபிஎஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேனியில் டிடிவி தினகரனுக்கு நல்ல அறிமுகம் உண்டு. 1999ஆம் ஆண்டு அப்போது பெரியகுளம் தொகுதியாக இருந்தபோது வெற்றி பெற்றுள்ளார். 2004-ம் ஆண்டிலும் பெரியகுளத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் தினகரன். தேனி தொகுதியில் தினகரன் சார்ந்த சமுதாய வாக்குகளும் அதிகம். அதனால் தேனியில் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications