ஓபிஎஸ் VS தங்கத் தமிழ்ச் செல்வன்.. தேனி மாவட்டத்தில் அனல் பறக்கும் அரசியல்!
தேனி: தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க.தமிழ்ச்செல்வன் இடையேயான அதிகார யுத்தத்தால் அரசு அதிகாரிகள் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறதாம்.
முன்னாள் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை கேட்பதா அல்லது ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் என்பதால் தங்க.தமிழ்ச்செல்வன் கூறுவதை கேட்பதா என பலரும் விழி பிதுங்குகிறார்களாம்.
இது போதாதென்று மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ஓ.பி.ரவீந்தரநாத் தரப்பில் இருந்தும் மாவட்ட நிர்வாகம் வசம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்வர் ராஜாவுக்கு வந்த ஆஃபர்! ஆஃப் செய்த ஓ.பன்னீர்செல்வம்! சட்டை செய்யாத எடப்பாடி பழனிசாமி!
தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமாகும். இதனால் இன்னுமே மாவட்டத்தில் தனக்கான பவரை பக்காவாக மெயிண்டெயின் செய்து வருகிறார் ஓ.பி.எஸ். போடி தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கூட பழைய தோரணையிலேயே அவர் கலந்துகொள்கிறார். இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அவருக்கு கடுமையாக டஃப் கொடுத்து வருகிறார்.
கோரிக்கை மனு
மக்கள் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் கூட தொகுதி வாரியாக குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியில் மக்களிடம் குறைகேட்கும் முகாம்களை நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்று மாவட்ட நிர்வாகம் மூலம் அதை தீர்வு பெற்றுக் கொடுக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். இதேபோல் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அதிகாரிகளை வேலை வாங்கவும் செய்கிறார்.
இரண்டு பக்கம்
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல், ஒரு பக்கம் ஓ.பி.எஸ். மற்றொரு பக்கம் தங்க.தமிழ்ச்செல்வன் என தேனி மாவட்ட அரசு அதிகாரிகள் திண்டாடுகிறார்களாம். இவர்கள் இருவர் போதாதென்று தேனி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ஓ.பி.ரவீந்தரநாத் அலுவலகத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்.
அரசுத் திட்டங்கள்
வரும்முன் காப்போம் திட்டம் தொடக்க விழா, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவ கப்பீட்டுத் திட்டம் தொடக்க விழா என மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். அதேவேளையில் தங்க.தமிழ்ச்செல்வன் பங்கேற்கும் நிகழ்ச்சி பக்கமே ஓ.பி.எஸ். திரும்பிப்பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.