விஜய்க்கு துணை! தமிழக வெற்றிக் கழகத்தில் தேனி எம்பி ரவீந்திரநாத் இணைகிறாரா?
தேனி: தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இந்த தேர்தல் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக நிச்சயம் அமையும். ராமநாதபுரத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ் வெல்வார்.

இதை நீங்கள் எழுதி வச்சிக்கோங்க. அது போல் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்.
யார் மக்கள் சேவை செய்தாலும் அது நல்ல விஷயம்தான். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக மக்களுக்கு நல்ல ஒரு பாதையை வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
போடி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் என் அப்பா பெயர் கொண்ட சுயேச்சையை நிருபர்கள்,"இந்த தொகுதிக்கு என்ன செய்ய போகிறீர்கள்" என கேட்டதற்கு அவர் என்ன சொல்வது என்றே தெரியாமல் மண்டையை சொரிகிறார்.
எடப்பாடி பழனிசாமி இந்த ஜனநாயகத்தை கேலிகூத்தாகும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அவர் சார்பில் ஒரு வேட்பாளரையும் அறிவித்த எடப்பாடி, ஓபிஎஸ் பெயர் கொண்ட ஒருவர் உசிலம்பட்டியிலிருந்து கொண்டு வந்து நிறுத்துகிறார். ஓபிஎஸ் தாத்தா என குழந்தைகள் கூட அன்போடு அழைக்கும் முகத்திற்குச் சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அவர் பழுத்த அரசியல்வாதி.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே ராமநாதபுரத்தில் அவர் பெயரில் பல வேட்பாளர்களை போட்டியிட மனு செய்ய வைத்துள்ளனர். அந்த குழப்பத்திற்கு வேட்புமனு பரிசீலனையிலேயே உண்மை நிலை தெரிந்து விடும். எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார்.
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அவரால்தான் பறிபோனது. இவ்வாறு ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பை விஜய் தொடங்கியுள்ளார். அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் சுயேச்சையாக களமிறங்கும் ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரே பெயர் ஒரே இனிஷியலில் 4 பேரும், எம். பன்னீர் செல்வம் என்ற ஒருவரும் என மொத்தம் 5 பேர், முன்னாள் முதல்வருக்கு எதிராக களத்தில் நிற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications