தாசில்தார் சொல்லியும் கேட்காமல்.. தேனி அருகே அலைய விட்ட அரசு ஊழியர்.. ஆபிசுக்கே தேடி வந்த ஆப்பு
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே வீட்டுவரி பெயர் மாற்ற ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் ஊராட்சி செயலர் சந்திரசேகரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளரை போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதுடன் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி சாவடி தெருவை சேர்ந்த 73 வயதாகும் சிவானந்தன் என்பவர் விவசாயி ஆவார். சிவானந்தன், தனது வீட்டுக்கு வரி பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு சுருளிப்பட்டி ஊராட்சி செயலா் சந்திரசேகரிடம் வீட்டுவரி பெயர் மாற்றத்துக்கு மனு அளித்துள்ளார். அப்போது வீட்டு வரி ரூ.600 செலுத்தாமல் இருப்பதாக ஊராட்சி செயலர் சந்திரசேகரன் கூறினாராம்.

இதையடுத்து விவசாயி சிவானந்தன் அந்த பணத்தை அலுவலக ஊழியரிடம் கொடுத்துவிட்டு வந்தாராம். ஆனால் அதன் பின்னரும் கூட வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயி சிவானந்தன் கடந்த மாதம் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் சிவானந்தன் மனு அளித்துள்ளார். அந்த மனுவை விசாரித்து, வீட்டுவரி பெயர் மாற்றம் செய்யும்படி சுருளிப்பட்டி ஊராட்சி செயலர் சந்திரசேகருக்கு, கம்பம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயபிரகாஷ் உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால் அதன்பின்பு பெயர் மாற்றம் செய்யாமல் ஊராட்சி செயலர் காலம் தாழ்த்தி வந்தாராம். இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிவானந்தன் மீண்டும் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு செயலர் சந்திரசேகர், வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதற்கு பேரம் பேசி, கடைசியில் சிவானந்தன் ரூ.8 ஆயிரம் தருவதாக கூறிவிட்டு வந்திருக்கிறார். எனினும் லஞ்சம் கொடுக்க அவருக்கு மனமில்லை.
இதைத்தொடர்ந்து நேராக கம்பத்தில் இருந்து தேனி வந்த விவசாயி சிவானந்தன், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா மற்றும் போலீசார் ஊராட்சி செயலரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக ரசாயன பவுடர் தடவிய ரூ.8 ஆயிரத்திற்கான நோட்டுக்களை போலீசார் விவசாயி சிவானந்தனிடம் கொடுத்து அனுப்பினர்.
நேற்று காலையில் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சிவானந்தன் சென்றார். அங்கு செயலர் சந்திரசேகரிடம் ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா மற்றும் போலீசார் அங்கு வந்து சந்திரசேகரை கையும்களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய பணத்தை கைப்பற்றிய போலீசார், அலுவலகத்தில் வைத்து சந்திரசேகரிடம் நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். கம்பம் பகுதியில் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
பொதுவாக அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் மாட்டினால் அவர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை உடனடியாக எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அடுத்ததாக பதவி உயர்வு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. மூன்றாவதாக சட்ட ரீதியாக வழக்கை கோர்டில் சந்திக்க வேண்டும்- இப்போது உள்ள தொழில்நுட்பம் காரணமாக வழக்குகளில் சிக்கியவர்கள் பணியில் இருக்கும் போதே தண்டைக்குள்ளாக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி வாழ்நாளில் அழிக்க முடியாத கரையாக இந்த பிரச்சனை இருக்கும். எனவே லஞ்சம் வாங்காமல் சேவை செய்வதே தற்போதைய நிலையில் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் நல்ல வாய்ப்பாகும். அதேநேரம் லஞ்ச ஊழலில் கைதாகும் ஊழியர்கள் மீதான வழக்கை ஓராண்டில் முடிக்க அரசு உத்தரவிடும் பட்சத்தில், லஞ்சம் வாங்குவோருக்கு பயம் அதிகரிக்கும். எனவே இதற்காக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications