தேனி மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக தக்கவைக்க... ஓ.பி.ஆர். வகுக்கும் வியூகம்
தேனி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விவகாரத்தில் மற்ற மாவட்டங்களில் எப்படியோ தேனியில் அதிமுக அதிரடி காட்டி வருகிறது.
இதற்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகனும், எம்.பியுமான ரவீந்தரநாத் குமார் தான் காரணம். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பெரியளவில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் திமுகவுக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் சட்டமன்றத்தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் இப்போதே அதற்கான அடித்தளத்தை திமுக வலுவாக கட்டமைத்து விட்டது.
ஆனால் அதிமுகவின் செல்வாக்கோ மக்களிடையே சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இதற்கு காரணம் முக்கிய நிர்வாகிகள் பலரும் நிவாரண உதவிகளுக்காக பணம் செலவு செய்ய தயங்கி நிற்பதே. இந்நிலையில் தேனியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக எப்போதும் திகழவேண்டும் என்றும், ஒருவேளை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தால் கூட தேனி மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாத வகையில் இங்கு அதிமுக வெற்றிபெற்றாக வேண்டும் எனவும் நினைக்கிறாராம் ஓ.பி.ரவீந்தரநாத் குமார்.
இதனால் நிவாரண உதவிகள் வழங்கும் விவகாரத்தை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் திமுகவைக் காட்டிலும் சற்று தாராளம் காட்டுகிறாராம். கூடவே மாற்றுக்கட்சியில் இருக்கும் தொண்டர்களை அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளையும் ஓ.பி.ஆர்.தரப்பு முன்னெடுத்துள்ளதாம். இதன் மூலம் எப்போதும் தேனி அதிமுகவின் கோட்டை என்பதை உணர்த்த நினைக்கிறாராம்.
இதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக கருதி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக தனது தந்தை ஓ.பி.எஸ். வசம் உள்ள போடி தொகுதிகுட்பட்ட பகுதியில் டோர் பை டோர் நிவாரண உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் ரவீந்தரநாத் குமார். திமுக தரப்பில் மாவட்ட பொறுப்பாளராக உள்ள கம்பம் ராமகிருஷ்ணன் தன்னால் இயன்ற வரை ஓ.பி.எஸ். தரப்புடன் முட்டி மோதி வருகிறார்.