என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!
தேனி: போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், கட்சிப்பணியை செய்தவர்களுக்கும்தான் சீட் என்று சொல்லிக்கொண்டு, கோடி கோடியாய் செலவு செய்பவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில், தவெக வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.
ஏற்கெனவே தூத்துக்குடியில், கட்சியின் நிர்வாகியான அஜிதாவுக்கு சீட் கொடுக்காமல், விஜய் தனது நண்பரும் சக நடிகருமான ஸ்ரீநாத்துக்கு சீட் கொடுத்திருந்தார். இது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியிருக்கையில் தேனியிலும் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது.

தவெக தலைமை மீதான புகார்
தமிழக வெற்றிக்கழகத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களிடையே, இரண்டு எதிர்பார்ப்புகளைதான் கட்சி தலைமை கொண்டிருந்தது. ஒன்று அவர்கள் எவ்வளவு பணம் செலவழிப்பார்கள். இரண்டாவது, அவர்கள் உள்ளூரின் பிரபலமான சாதிய பிரதிநிதியா என்பதுதான். இதுதான் தவெக மீதான சமீபத்திய குற்றச்சாட்டு.
தேனியில் நடந்தது என்ன?
தேனியின் கம்பம் சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎல்ஏ.ஜெகநாத் மிஸ்ராவை, கம்பம் தொகுதி வேட்பாளராக விஜய் அறிவித்திருக்கிறார். இந்த நபர் தன்னை சாதி வெறியன் என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். அப்படியானவருக்கு விஜய் எப்படி சீட் கொடுக்கலாம்? என்று நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
யார் இந்த ஜெகநாத் மிஸ்ரா?
24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவனர்தான் இந்த பிஎல்ஏ.ஜகநாத் மிஸ்ரா. இவர் சமீபத்தில் பேசிய வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. அதில், "நான் அரசியல் பேசுவதால், எம்எல்ஏ ஆக முயற்சிக்கிறேன் என்று பலரும் விமர்சிக்கிறார்கள். எனக்கு அப்படியான எண்ணம் கிடையாது. என் சமூகத்தை சேர்ந்தவரை எம்எல்ஏவாக அமர வைக்கவே ஆசைபடுகிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது தவெக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக களமறிங்கியிருக்கிறார்.
உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு
இதற்குதான் உள்ளூர் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கட்சிக்காக களத்தில் இறங்கி போஸ்டர் ஒட்டி வேலை செய்தவர்களை கட்சி தலைமை கண்டுக்கொள்ளாமல், சாதியை வைத்து தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் நபரை ஏன் தவெக தலைமை, எம்எல்ஏ வேட்பாளராக அறிவித்தது? என்று கேள்வி எழுப்பி, கம்பம் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜகநாத் மிஸ்ராவுக்கு எதிராகவும், தவெக தலைமைக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
பெண் நிர்வாகிகள் போராட்டம்
இதனால் கட்சியின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கட்சி சமாதானம் பேசியிருக்கிறது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள், விலகி செல்லவில்லை. பின்னர் நீண்ட நேரம் சமாதானம் பேசிய பின்னர், அவர்கள் விலகி சென்றிருக்கின்றனர். முன்னதாக தூத்துக்குடியில், அஜிதாவுக்கு பதில், ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் உள்ளூர் நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications