மறப்போம், மன்னிப்போம் என சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்- தங்கதமிழ்ச்செல்வன்
தேனி: மறப்போம், மன்னிப்போம் என சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள் என அமமுகவின் தேனி தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
தேனியில் அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சியை கலைக்க திமுக எங்களுக்கு உதவ வேண்டும்.
ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தூத்துக்குடியில் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்டு
அப்போது அவர் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் கூறியதன் மூலம் திமுக -அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் தங்கதமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜெயலலிதா
அப்போது அவர் கூறுகையில் அன்று ஜானகி ஆட்சியைக் கலைத்ததற்கு காரணமே துரோக ஆட்சியை நீக்கிவிட்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை கொண்டு வரத்தான். அதே பாணியில்தான் தற்போது எடப்பாடி ஆட்சியை கலைத்துவிட்டு டிடிவி தினகரன் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்.

அதிமுக ஆட்சி
22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெற்றுவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராகதான் நாங்கள் வாக்களிப்போம். அதே போல் திமுகவும் அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என்றுதானே நினைக்கும்.

திமுகவும் அமமுகவும் கூட்டணி
அது போல் முஸ்லீம் லீக் கட்சியும் தமிமுன் அன்சாரியும் அதிமுகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று தெரிவித்தேன். அதற்காக திமுகவும் அமமுகவும் கூட்டணி என கூறுவதா.

அண்ணா வழியில்
எப்படியாவது எடப்பாடி ஆட்சியை கலைக்க வேண்டும். திமுக எங்களுக்கும் எதிரிதான். மறப்போம், மன்னிப்போம் என அண்ணா வழியில் சென்றால் மக்கள் எங்களை மறந்துவிடுவார்கள் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications